மறைந்தார் வாஜ்பாய்!
Recommended Video

டெல்லி: பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 94.
நீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை வந்தார் வாஜ்பாய் இந்த நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் உயிர் பிரிந்தது.

1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர இந்துத்துவா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து இன்றைய பா.ஜ.க.வுக்கு முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங் எம்.பி.யாக முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
9 முறை லோக்சபா, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தார். 1975-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறை சென்ற அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார். 1970களில் பாரதிய ஜன சங், ஜன சங்கமானது. பின்னர் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி உதயமானது ஜனசங்கமும் அதில் சங்கமமானது. அப்போது 1970களின் இறுதியில் அமைக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார் வாஜ்பாய்.
பின்னர் ஜனதா கட்சி உடைய பாரதிய ஜனதா கட்சி உதயமானது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார் வாஜ்பாய். காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக பாஜக வளரத் தொடங்கியது. இந்தியாவின் 10-வது பிரதமராக 1996-ம் ஆண்டு பதவி ஏற்றார். எனினும், நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். 1999-ல் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இந்த வெற்றிகளின் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகள் அறியச் செய்தார்.
பாகிஸ்தானுடனான நல்லுறவை ஏற்படுத்த பேருந்து போக்குவரத்து, அமைதி பேச்சு வார்த்தை என பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார். ஆனாலும், காந்தகார் விமான கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், குஜராத் இனக்கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன.

2004-ம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005-ம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா படுகொலைகள் நடைபெற்றபோது மோடி அங்கே முதல்வராக இருந்தார். அப்போது, யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது பெரும் பாராட்டைப் பெற்றது.
நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மரபுகளை புறந்தள்ளி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய்.
சமீபத்தில்தான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை தேசம் இழந்தது. இப்போது இன்னொரு முக்கிய அரசியல் பிதாமகரான வாஜ்பாயை நாடு இழந்துள்ளது.












Click it and Unblock the Notifications