விமான எரிபொருளின் விலை 8.2%, மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.5 உயர்வு
டெல்லி: விமான எரிபொருளின் விலை 8.2 சதவீதமும், மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.5ம் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் உள்ள எண்ணெய் நிலவரத்தின்படி விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ. 3,849.97 அதாவது 8.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு கிலோலிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ. 50 ஆயிரத்து 363 ஆகும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டு வந்தது. கடைசியாக பிப்ரவரி 1ம் தேதி விமான எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.5,909.9 குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி வரை விமான எரிபொருளின் விலை ரூ. 23 ஆயிரத்து 648.73 அதாவது 33 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை விமான எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களின் செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்கு தான் செல்கிறது. இந்நிலையில் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றி விமான நிறுவனங்கள் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.610 ஆக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை 7 முறை குறைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி தான் கடைசியாக மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.103.5 குறைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிப்ரவரி வரை மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலை ரூ.317.50 குறைக்கப்பட்டது.
அரசுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப விமான எரிபொருள் மற்றும் மானியமில்லா கேஸ் சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாத துவக்கத்திலும் மாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications