துப்பாக்கி சூடுக்கு பிறகும் கொள்ளையர்களை தீரத்தோடு தடுத்த டெல்லி ஏடிஎம் காவலாளி! திக், திக் வீடியோ
Recommended Video

டெல்லி: டெல்லியில் தன்னை துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்களை விடாமல் விரட்டியடித்துள்ளார் ஏடிஎம் காவலாளி ஒருவர். அந்த சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.
திரைப்படங்களில் மட்டுமே ஹீரோக்கள் நடமாடுவதில்லை. நிஜத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.
டெல்லியிலுள்ள மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் ஒன்றில் நடைபெற்ற இந்த திகில் காட்சி காண்போரை கலங்கடிக்கிறது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

துப்பாக்கி சூடு
பார்த்தால் பகல் பொழுதாக தெரிகிறது. அப்படியும் தைரியமாக பைக்கில் துப்பாக்கிகளுடன் வருகிறார்கள் 2 கொள்ளையர்கள். பைக்கை விட்டு இறங்கியதுமே, ரிவால்வரால் ஏடிஎம் காவலாளியின் காலில் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். இதையடுத்து மற்றொருவன் ஏடிஎம் வாசல் கதவை மிதித்து உடைக்க முற்படுகிறான்.
ஏடிஎம் மையத்திற்குள் பணம் எடுக்க வந்த ஒருவர், இந்த களேபரத்தை பார்த்து அஞ்சி நைசாக வெளியே ஓடுகிறார்.

தடுக்கும் காவலாளி
இதனிடையே, துப்பாக்கியால் சுட்ட பிறகும், கொள்ளையனை பிடித்தபடி உள்ளே செல்லவிடாமல் போராடுகிறார் அந்த காவலாளி. மற்றொரு கொள்ளையனையும் கூட உள்ளே போக விடாமல் தடுகிறார். இருவரும் சேர்ந்து அவரை தள்ளிவிடுகிறார்கள்.

தப்பியோட்டம்
இரு துப்பாக்கிகளை பார்த்தும், உடலில் துப்பாக்கி குண்டை ஏந்தியும் கூட அஞ்சாமல், இரு கொள்ளையர்களையும் வழி மறிக்கிறார், கெஞ்சி கைகூப்பி போய்விடுமாறு மன்றாடுகிறார். அதில் ஒரு கொள்ளையன் கொஞ்சம் மனம் இளகுகிறது. சக கொள்ளையனை இதற்கு மேலும் இங்கே நிற்க வேண்டாம் என சொல்லிவிட்டு பைக்கில் ஏற்றிக்கொண்டு தப்பிவிடுகிறான்.
|
சிசிவி காட்சிகள்
அதேநேரம், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வீடுகளுக்குள் ஓடிச் சென்று ஒழிந்து கொள்ளும் காட்சியும் சிசிடிவியில் உள்ளது. யாருமே உதவிக்கு வராத நிலையிலும் தனியாளாக அந்த காவலாளி கொள்ளையர்களை எதிர்த்து போராடியுள்ளார். கொள்ளையர்கள் போன பிறகு வலியால் காலை பிடித்தபடி ஏடிஎம் வாசலில் அமர்கிறார் அந்த காவலாளி. இதில் அதிர்ச்சி என்னவென்றால், அப்போதும் உடனே யாருமே உதவிக்கு ஓடவரவில்லை. எட்டிப் பார்த்தபடி உள்ளனர் சக மக்கள்.












Click it and Unblock the Notifications