5வது நாளாக மீட்பு பணி! எப்படி இருக்கிறோம்.. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளி பேசும் ஆடியோ வெளியானது
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி 5 வது நாளாக நடந்து வரும் நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது. உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா - தண்டல்கான் கிராமங்களை இணைப்பதற்காக இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 11ம் தேதி அதிகாலையில் இடிந்து விழுந்தது. இந்த சுரங்கப் பாதை பணியில் 40 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதனையடுத்து சுரங்கப் பாதை இடிந்து விழுந்தது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரொம்ம சிக்கலான பகுதி என்பதாலும், உள்ளே தொழிலார்கள் உயிருடன் இருப்பதாலும் இடிபாடுகள் கவனமாக அகற்றப்பட்டு வருகிறது. இதனால் மீட்பு பணிகள் மெதுவாக நடக்கிறது.
இந்த நிலையில், 5வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி ஒருவர் வாக்கி டாக்கி மூலம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள ஜார்க்கண்டை சேர்ந்த மகாதேவ் என்பவர் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. வாக்கி டாக்கி மூலமாக மகாதேவ் என்ற தொழிலாளி பேசுகையில், "கவலைப்பட வேண்டாம் என எனது குடும்பத்தினரிடம் சொல்லி விடுங்கள்.." எனக் கூறுகிறார். இந்த ஆடியோவை கேட்ட பிறகு பெரும் நிம்மதியுடன் இருப்பதாக மகேதேவின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் சுரங்க பாதை இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் பீகார், இமாச்சல், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். முன்னதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமியை பிரதமர் மோடி அழைத்து மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இது குறித்து முதல்வர் புஷ்கர் தாமி கூறுகையில், "பிரதமர் மோடி தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மத்திய, மாநில பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களுக்கு உணவு உள்ளிட்டவை உள்ளே அனுப்பி வைக்கப்படுகிறது. அனைவரையும் பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.












Click it and Unblock the Notifications