தமிழ்ப் பெண்ணை மணக்க முடியாது - முகூர்த்த நேரத்தில் “எஸ்கேப்” ஆன ஆட்டோ டிரைவர்
குடகு: கர்நாடகாவில் தமிழ்ப்பெண் என்றும், சாதியையும் காரணம் காட்டி முகூர்த்த நேரத்தில் காதலியை திருமணம் செய்ய மறுத்து ஓட்டம் பிடித்த ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே உள்ள மைலாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் தர்மா. ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 24 வயது நிரம்பிய ஒரு கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகி வந்த அந்த மாணவியிடம் தர்மா தனது காதலை தெரிவித்தார்.
அதற்கு அந்த மாணவி, தான் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்றும், மேலும் தமிழ்ப் பெண் என்றும் கூறி தர்மாவின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் தர்மா அந்த மாணவியை தொடர்ந்து வற்புறுத்தினார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.
அதன்பேரில் அந்த மாணவியும் தர்மாவை காதலித்தார். இதனால் காதல் ஜோடி அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்தனர். அப்போது தர்மா திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தர்மாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
ஆனால் தர்மா திருமணத்திற்கு மறுத்து காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தெரிவித்தார். அவர்கள் தர்மாவிடம் தங்களது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தர்மா அந்த மாணவி தமிழ்ப்பெண் என்றும், சாதியையும் காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்தார். இதனால் அந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சித்தாப்புரா போலீசிலும் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் தர்மாவை அழைத்து விசாரித்தனர். அப்போது தர்மா அந்த மாணவியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. நேற்று அவர்களது திருமணம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் கோவிலில் கூடியிருந்தனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் தர்மாவும், அவரது குடும்பத்தினரும் கோவிலுக்கு வரவில்லை. தர்மாவை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முகூர்த்த நேரத்திற்குள் கோவிலுக்கு வந்துவிடுவதாக கூறினார். முகூர்த்த நேரம் நெருங்கவே பெண் வீட்டார் மீண்டும் தர்மாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் குடும்பத்துடன் தப்பி ஓடி தலைமறைவானதும் தெரியவந்தது.
இதனால் திருமணம் நின்றது. முகூர்த்த நேரத்தில் திருமணம் நின்றதால் மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து அந்த பெண் சித்தாப்புரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.