நாட்டின் கவுரவமான தேசிய விருதினை திருப்பி அளிப்பது சரியல்ல- சாடும் ஹேமமாலினி
மும்பை: தேசிய விருதுகளை திருப்பி அளிப்பது சரியானது அல்ல என்று முன்னாள் பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய விருதுகளை பெறுவதற்காக மக்கள் உயிரை கொடுத்து உழைக்கிறார்கள். எனவே அவற்றை திருப்பி அளிப்பது சரியானது அல்ல. இந்த போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்ட விவகாரம் என்று நான் கருதுகிறேன்.

தேசிய விருது என்பது நாட்டின் கவுரவம். தேசிய விருதுகளை பெற நீங்கள் உதவி செய்ய முடியுமா? என்று என்னிடம் கேட்டவர்கள், இன்றைக்கு அவற்றை திருப்பி அளிக்கிறார்கள் என்றார். புனே திரைப்பட கல்லூரி பிரச்சினை தீர்த்து வைக்கப்படுமா? என்று கேட்டதற்கு, இதுபற்றி நாம் பின்னர் பேசலாம்" என்று ஹேமமாலினி பதில் அளித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி சம்பவம், புனே திரைப்பட கல்லூரி விவகாரம் ஆகியவற்றை கண்டித்தும் நாட்டில் சகிப்புத்தன்மை சிறிது கூட இல்லை என்று குற்றம் சாட்டியும் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுகளை அரசிடம் திருப்பி அளித்தனர்.
இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திருப்பி ஒப்படைப்போம் என்று இந்தி திரையுலகை சேர்ந்த 12 இயக்குனர்கள் கடந்த மாதம் அறிவித்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications