‛ஒருநாள் மழைக்கே தாங்கலையே’.. 6 மாதத்திலேயே இடிந்து விழுந்த அயோத்தி ரயில் நிலைய சுவர்.. என்னாச்சு?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் வெறும் 6 மாதத்தில் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சிக்க தொடங்கி உள்ளன.
உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் என்பது கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி கும்பாபிஷேகத்தில் பங்கேற்று பிரதிஷ்டை செய்தார்.

முன்னதாக அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் கட்டிய பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு ரயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அந்த ரயில் நிலையம் கூடுதல் வசதிகளுடன் புனரமைக்கப்பட்டது. புனரமைப்பு பணி முழுவதுமாக முடிவடைந்த பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.
மேலும் ரயில் நிலையத்தின் பெயர் என்பது மாற்றம் செய்யப்பட்டது. அயோத்தி ரயில்வே சந்திப்பு என்று இருந்த அதன் பெயர் அயோத்தி தாம் என மாற்றம் செய்யப்பட்டது. அயோத்தி தாம் என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல்லாகும். இதனால் அயோத்தி ரயில்வே சந்திப்பு என்பது அயோத்தி தாம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் அயோத்தியில் தற்போது மழை பெய்து வருகிறது. நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் தான் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அயோத்தி ரயில் நிலையத்தின் வெளிப்புறம் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுமார் 20 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து தரையில் விழுந்துள்ள நிலையில் சுற்றுச்சுவர் இன்னொரு பகுதி சாய்ந்தபடி எப்போது வேண்டுமாானலும் விழும் என்ற நிலையில் உள்ளது.
இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் தான் எதிர்க்கட்சி தலைவர்கள், நெட்டிசன்கள் பாஜகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர். அதாவது புனரமைப்பு பணி முடிவடைந்து கடந்த டிசம்பர் மாதம் தான் அயோத்தி ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது 6 மாதத்துக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ‛‛பெரும் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை. பாஜக மாடலின் உண்மை முகம் இதுதான்'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications