மிஸ்ஸே ஆகாது.. களமிறங்கிய ‛ஏஐ டெக்னாலஜி’.. போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டில் அயோத்தி!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கும் நிலையில் அங்கு 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார் என 30,000க்கும் அதிகமானவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டடங்களின் மேல்புறம் குறி பார்த்து சுடும் போலீசார் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டுள்ளதோடு ஏஐ தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மேலும் விவிஐபிக்கள் உள்பட மொத்தம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி மட்டுமின்றி அந்த மாவட்டம் முழுவதுமே போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அயோத்தி முழுவதும் இன்று மத்திய பாதுகாப்பு படையினர் 13,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் போலீசார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிஜி, சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், சிறப்பு கமாண்டோ, தீவிரவாத தடுப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போலீசார் சாதாரண உடையிலும் அயோத்தி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வலம் வர உள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயரமான கட்டிடங்களில் குறிதவறாமல் சுடும் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டின் மொட்டை மாடியிலும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் . உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த உளவுப்பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 'ரா' உளவு பிரிவை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அயோத்தியில் முகாமிட்டுள்ளனர்.
அயோத்தி நகரை 24 மணி நேரமும் கண்காணிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி கோவில் மற்றும் அதனை சுற்றிய முக்கிய இடங்களில் 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் எனும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை சுட்டு வீழ்த்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ட்ரோன்களை முடக்கும் தொழில்நுட்ப வசதியும் அயோத்தி கோவிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு விவிஐபிக்கள் அதிகமாக வருகை தர உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருகை தர உள்ள நிலையில் அவர்கள் எந்தவித இடையூறுமின்றி வந்து செல்ல 51 இடங்களில் வாகன நிறுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தயாராக உள்ளனர். சராயு நதிக்கரை என்பதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு வீரர்களும் தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர் என உத்தர பிரதேச சட்டம் - ஒழுங்கு டிஜிபி பிரசாந்த் குமார் விளக்கமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications