எல்லோரும் ரொம்ப ஸ்டிரிக்ட்.. அயோத்தி வழக்கில் இந்த 5 நீதிபதிகள்தான் தீர்ப்பு வழங்குகிறார்கள்!
அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் தீர்ப்பு வழங்குகிறது.
Recommended Video
சென்னை: அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இந்தியாவில் மிக மிக முக்கியமான வழக்காக வர்ணிக்கப்படும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு.
தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், எஸ்ஏ போப்டே ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.

ரஞ்சன் கோகாய் யார்?
அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுதான் இந்த தீர்ப்பை வழங்குகிறது. ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அதற்குமுன் அவர் இந்த முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்க இருக்கிறார். நீதிபதி ரஞ்சன் கோகாய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவர் 1978லேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டார்.
பஞ்சாப் நீதிமன்றத்திலும், ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் நியமிக்கப்பட்டு, பின் அங்கேயே தலைமை நீதிபதி ஆனார். அதன்பின் 2012ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.இவர் குறிப்பிடத்தக்க சில வழக்கு விசாரணையில் நீதிபதியாக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின், சிபிஐ தரப்பு வாத விசாரணையில் ஒரு நீதிபதியாக இருந்தார். மிகவும் கண்டிப்பான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.

நீதிபதி எஸ்ஏ போப்டே
இந்த அமர்வில் உள்ள நீதிபதிகளில் முக்கியமானவர் நீதிபதி எஸ்ஏ போப்டே. அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்ஏ போப்டே பொறுப்பேற்க உள்ளார். போப்டே இதற்கு முன் மத்திய பிரதேச மாநில ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார்.
அதேபோல் மஹாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலை மற்றும் நாக்பூர் தேசிய சட்ட பல்கலையில் இவர் வேந்தராக இருக்கிறார். அங்கு தலைமை நீதிபதியாக இருந்த போது இவர் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குடிமகன்களில் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய ஆதார் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் போப்டே இருந்தார்.

நீதிபதி அப்துல் நசீர்
நீதிபதி அப்துல் நசீர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 1983ல் இருந்து இவர் வழக்கறிஞர் பணியில் இருக்கிறார். அதன்பின் 2003ல் இவர் கர்நாடக மாநில ஹைகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017ல் இவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டார். ஆம், இவர் ஹைகோர்ட் தலைமை நீதிபதியாகவே இல்லாமல், உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக உயர்த்தப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் முறை குற்றம் என்று தீர்ப்பு வந்த அமர்வில் இவர் இருந்தார். இதில் 3:2 என்ற அடிப்படையில், முத்தலாக் முறை குற்றம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முத்தலாக் முறையை குற்றம் இல்லை என்று நீதிபதி அப்துல் நசீர் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளில் மிகவும் வித்தியாசமான அதிரடி தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிதான் டி.ஒய் சந்திரசூட். இவர் தீர்ப்பு வழங்கும் போது பயன்படுத்தும் வாக்கியங்கள் பல தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. இவரின் அப்பா ஒய்.வி சந்திரசூட் நீண்ட காலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சாதித்தவர். மும்பையில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் படித்தவர்.
ஏடிஎம் ஜபல்பூர் வழக்கு, அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கியது, ஒரு பாலின சேர்க்கை குற்றம் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது என்று டி.ஒய் சந்திரசூட் பல முக்கிய வழக்குகளில் வரவேற்கத்தக்க அதிரடி தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.

நீதிபதி அசோக் பூஷன்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதிபதி அசோக் பூஷன் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவர் மட்டுமே அயோத்தி அமர்வில் தனது சொந்த மாநிலம் தொடர்பான வழக்கை விசாரித்துள்ளார். கேரளா ஹைகோர்ட்டில் இவர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். 1979ல் இருந்து இவர் சட்ட துறையில் இருக்கிறார். 2016ல் இருந்து இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். இந்தியாவில் அதிக அனுபவம் வாய்ந்த நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications