தெலுங்கானா காங். தலைவராக நடிகை விஜயசாந்தி அல்லது அசாருதீன்?
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அல்லது நடிகை விஜயசாந்தியை நியமிப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அசாருதீன் 2009-ல் எம்.பி.யானார். கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
தற்போது காங்கிரஸ் கட்சி பிரமுகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக முகமது அசாருதீனை நியமிக்க சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானா மாநில தலைவராக உள்ள உத்தம்குமார் ரெட்டி மீது நாள்தோறும் டெல்லி மேலிடத்துக்கு புகார்கள் பறந்தபடியே இருக்கிறதாம். அதுவும் காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வரிசையாக ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் ஐக்கியமாவதை உத்தம்குமாரால் தடுக்க முடியவில்லை என்பதும் முக்கிய குற்றச்சாட்டாகும்.
இதனால் சோனியா, ராகுல் ஆகியோர் உத்தம்குமார் ரெட்டி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனைத் தொடர்ந்தே உத்தம்குமார் ரெட்டியை தூக்கியடித்துவிட்டு புதிய தலைவரை நியமிப்பது குறித்து டெல்லி மேலிடம் ஆலோசிக்கிறதாம்.
புதிய தலைவர்கள் பட்டியலில் நடிகை விஜயசாந்தி, டிகே அருணா, அசாருதீன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில்தான் அசாருதீனை டெல்லிக்கு வரவழைத்து சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனால் தெலுங்கானா காங்கிரஸ் தலைவராக அசாருதீன் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.