ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் விப்ரோ அஜிம் பிரேம்ஜி பங்கேற்பு!
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் கூட்டத்தில் விப்ரோ தலைவர் அஜிம் பிரேம்ஜி பங்கேற்றது சர்ச்சையை ஏர்படுத்தியுள்ளது.
டெல்லியில், ஆர்எஸ்எஸ் அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கு பிரேம்ஜிக்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்புவிடுத்திருந்தார். அதையேற்றுக் கொண்ட பிரேம்ஜி கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பிரேம்ஜி உரையாற்றவும் செய்தார். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கொள்கைகளுடன் பிரேம்ஜி சமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று சர்ச்சை வெடித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள பிரேம்ஜி, ஒரு குறிப்பிட்ட அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்று பேசுவோர்கள் எல்லாம், அந்த அமைப்பின் கொள்கை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு பின்பற்றுவார்கள் என்று எப்படி சொல்ல முடியும் என்றார்.
பவுண்டேசன் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை தனது பெயரில் நடத்திவரும் பிரேம்ஜி, சுமார் 500 என்ஜிஓக்கள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் பேசுகையில், மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.8 சதவீத மதிப்புக்குதான் கல்விக்கான நிதியாக ஒதுக்கீடு செய்கிறது.
பல நாடுகளும், 3.5 சதவீத அளவுக்கு, நிதி ஒதுக்கீடு செய்கின்றன. வளர்ந்த நாடுகள் பல, 5 முதல் 6சதவீத தொகையை கல்விக்காக ஒதுக்கீடு செய்கின்றன.
இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி போதாது. நாட்டு நலனுக்காக பல அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும். எதையும் குதர்க்கமாகவும், எதிர்மறை சிந்தனையோடும் பார்ப்பவர்கள் ஏதாவது விமர்சனம் செய்து கொண்டேதான் இருப்பார்கள். நாம் முன்னேற்றத்திற்கான வழியை மட்டுமே பார்க்க வேண்டும்
குறிப்பாக கல்வித்துறையில் பெருமளவுக்கு மாற்றம் தேவை என்றார்.