பலாத்காரங்களுக்கு காரணம் கல்வி முறையும், ஊடகங்களுமே... பாபா ராம் தேவ் புகார்
டெல்லி: பலாத்காரங்களுக்குக் காரணம் நமது நாட்டின் கல்வி முறையும், ஊடகங்களும் தான் என யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் டெல்லியில் தனியார் டாக்சியில் சென்ற பெண், டிரைவரால் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிரைவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இச்சம்பவம் தொடர்பாக பாபா குருதேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது:-
தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு கல்வி முறை மற்றும் ஊடகங்கள் தான் காரணம். மேலும் இவைகள் குற்றவாளிகளை குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றன.
பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது மீடியாக்களின் கீழ்தரமான செயல்கள், இரண்டாவது நமது கல்வி முறை மூன்றாவது சட்டங்களை புறக்கணிப்பது போன்றவை ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேயுடன் இணைந்தும், தனியாகவும் போராட்டங்களை நடத்தியவர் யோகா குரு பாபா ராம்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.