ராஜமௌலி உருவாக்கும் ஆந்திர தலைநகர்.. 58 ஆயிரம் கோடி செலவில் தயாராகிறது.. ப்ளூ பிரிண்ட் ரெடி!
ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக போகும் அமராவதி நகரத்தை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி வடிவமைக்கிறார்.
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக போகும் அமராவதி நகரத்தை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி வடிவமைக்கிறார். இதற்கான ப்ளூ பிரிண்ட் தற்போது தயாராகி இருக்கிறது.
இந்த நகரத்தை வடிவமைக்க நிறைய அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவிலேயே சிறந்த நகரமாக அமராவதி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நகரத்தை தன்னுடைய கனவு போல கட்ட விரும்புவதாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். அதேபோல் பாகுபலி படத்தில் வேலை பார்த்த இன்னும் சிலரும் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆந்திராவின் புதிய தலைநகர்
ஆந்திராவில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலத்திற்கும் ஹைதராபாத் தலைநகராக செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் 7 வருடத்திற்கு பின் ஹைதராபாத் முழுக்க முழுக்க தெலுங்கானாவின் தலைநகராக மாறிவிடும். இதன் காரணமாக தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகராக மாற இருக்கிறது.
புதிய தலைநகர் அமராவதி
ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை வடிவமைக்க இன்னும் 7 வருடம் இருக்கிறது. ஆனால் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு 2019 இறுதிக்குள் அமராவதி நகரம் வடிமைத்து முடிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதற்காக பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி பயன்படுத்தப்பட இருக்கிறார். மேலும் பாகுபலி படத்தில் வேலை செய்த கலை இயக்குநர்களும் இந்த வேலையில் களம் இறங்க உள்ளனர். அதேபோல் வெளிநாட்டில் நகரங்களை வடிவமைத்த சில முக்கிய நபர்கள் இதில் ஈடுபடுவார்கள்.
ப்ளூ பிரிண்ட் ரெடி
இந்த தலைநகர் உருவாக்கத்திற்காக நேற்று ஹைதராபாத்தில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலி அமராவதி நகரத்தின் புதிய ப்ளூ பிரிண்டை சமர்ப்பித்து இருக்கிறார். அமராவதி நகரம் உலகிலேயே சிறந்த ஐந்து நகரங்களில் ஒன்றாக இருக்கும். மேலும் இந்தியாவின் நம்பர் 1 நகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நகரம் முழுக்க முழுக்க எதிர்கால உலகத்தை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கட்டப்படவுள்ளது.
செலவு எவ்வளவு
அமராவதியை உருவாக்க மொத்தமாக 58 ஆயிரம் கோடி செலவாகும். இந்த செலவில் ஊரக வளர்ச்சி இயக்ககம் மற்றும் உலக வங்கி இணைந்து 14 ஆயிரம் கோடி கொடுக்கும். மேலும் 14,250 கோடி பணம் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பில் வழங்கப்படும். மீதம் உள்ள பணம் அனைத்தும் பல்வேறு இடங்களில் வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நகரம் மொத்தம் 33 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும். இதற்கான நிலங்கள் அனைத்தையும் அரசு விவசாயிகளிடம் இருந்து வாங்கி இருக்கிறது.