வேலைக்காரச் சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: முதலாளிக்கு ஜாமீன் தர கோர்ட் மறுப்பு
டெல்லி: டெல்லியில் வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடூரமாக சித்ரவதை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பெண்மணியான வந்தனாவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
கடந்த வாரத்தில் தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டிலிருந்து சிறுமி ஒருத்தி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டாள்.
போலீஸ் விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளரான 50 வயது வந்தனா திர் என்ற பெண்மணி வீட்டு வேலைக்காக வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அச்சிறுமியை கொடூரமான முறையில் சித்ரவதை செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு நிறையில் அடைக்கப் பட்டார் வந்தனா. படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனமொன்றில் பணி புரியும் வந்தனா தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என டெல்லி கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளவர் அரக்கத்தனமான முறையில் நடந்து மனித உரிமைகளை மீறியுள்ளார். எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது. அவர் வெளியே சென்று சாட்சிகளை கலைத்து விடவும் வாய்ப்புகள் உள்ளன.
ஜாமினில் விடுவிக்கும் முன்னரே அவரது அரக்கத்தனமான குணத்தை மாற்ற உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவது மிகவும் முக்கியம் எனக் கூறி ஜாமீன் தர மறுத்து விட்டார்.