பெங்களூரு ஏ.டி.எம்.மில் பெண்ணை தாக்கியது ஆந்திரா கொள்ளையன்!

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய் (37). தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த 19ஆம் தேதி, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது, ஏ.டி.எம் உள்ளே புகுந்த கொள்ளையன், ஷட்டரை பூட்டிவிட்டு, ஜோதியை அரிவாளால் சரமாரியாக வெட்டினான். இதில் பலத்த காயம் அடைந்த ஜோதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் பெண்ணை தாக்கிய அன்றே ஆந்திராவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் இரண்டு ஏ.டி.எம் மையங்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்தபோது கைரேகை ஒப்பிட்டிருந்தது.
இதையடுத்து, தீவிர விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் ஏ.டி.எம் கொள்ளையனை அடையாளம் கண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த கொள்ளையன் நாராயண ரெட்டி என்பதும், தற்போது தந்தையுடன் வசித்து வருகிறான் என்றும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினர், கொள்ளையன் நாராயண ரெட்டியை பிடிக்க சென்றபோது தப்பிவிட்டான். அவனின் தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையனை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக, ஆந்திரா மாநில காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications