பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: 4 சிமி தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு
பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என கருதப்படும் சிமி அமைப்பைச் சேர்ந்த 4 பேரின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் சிமி அமைப்பைச் சேர்ந்த 4 பேரின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த 4 பேரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கந்த்வா சிறையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தப்பியோடியவர்கள். அதில் இருவர் சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் நடந்த என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்த தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்கள் கைதானால் பல வழக்குகள் குறித்த விவரங்கள் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
பெங்களூர் குண்டுவெடிப்பு, உத்தர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கும், அந்த நபர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் சிறையில் இருந்து தப்பியோடியதில் இருந்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் தென்னிந்தியாவில் இருப்பதாகவும் அண்மையில் பெங்களூருக்கு வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அவர்கள் தென்னிந்திய மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு அடிக்கடி செல்வதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களை பிடிக்க உதவி செய்யுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஷேக் மஹபூப், அஜ்மத் கான் என்கிற தவ்த், சாலிக் என்கிற சல்லு, ஜாகிர் என்கிற சாதிக் ஆகியோர் தான் தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படும் நபர்களில் பட்டியலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications