மட்டன் பிரியாணி கேட்டு அடம் பிடித்த மாப்பிள்ளை வீட்டார்.. கல்யாணம் கேன்சல்டா...!
பெங்களூரு: பெங்களூரில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மட்டன் பிரியாணி கேட்டு மாப்பிள்ளை வீட்டார் அடம் பிடித்த காரணத்தால் பெண் வீட்டார் திருமணத்தையே ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர், சைபுல்லா; துபாயில் பணியாற்றுகிறார். இவருக்கும், யாஸ்மி என்ற பெண்ணுக்கும், சமீபத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு முதல்நாள் ஹோட்டல் ஒன்றில், வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு, பெண் வீட்டார் சார்பில், சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.
இதற்கு, மாப்பிள்ளை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மட்டன் பிரியாணி தான் போட வேண்டும். நீங்கள், சிக்கன் பிரியாணி விருந்து வைத்துள்ளதால், வரவேற்புக்கு வருபவர்கள், எங்களை குறைத்து மதிப்பிடுவர். உடனே, மட்டன் பிரியாணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என, பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டார், எகிறினர்.
பெண் வீட்டாரோ, 'சிக்கன் பிரியாணி தான் போட முடியும். மட்டன் பிரியாணி, விலை அதிகம் என்பதால், எங்களிடம் பணம் இல்லை' என, உறுதியாக கூறி விட்டனர். இதனால், இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரியவர்கள், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தினர். எனினும், இரு தரப்புமே, சமாதானத்தை ஏற்கவில்லை. திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டார் அதிகாரம் செலுத்துகின்றனர். திருமணத்திற்குப் பின்னர் தங்கள் பெண் அங்கு சென்று நன்றாக இருப்பால் என்று எப்படி கூறமுடியும் என்று நினைத்த பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர்.
மட்டன் பிரியாணிக்காக மாப்பிள்ளை வீட்டார் செய்த அலம்பல் காரணமாக திருமணமே ரத்தான சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications