லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன சிஇஓ! பெங்களூரில் பரபரப்பு
பெங்களூர்: ஹோட்டலுக்கு சாப்பிடப் போன இடத்தில் சக பெண் ஊழியரை லிப்டில் வைத்து பாலியல் சில்மிஷத்துக்கு உள்ளாக்கிய தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரியை (சி.இ.ஓ) பெங்களூர் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூர் கோரமங்களா அருகேயுள்ள ஜக்கசந்திராவில் வீடியோ கேம் டிசைன் மற்றும் தயாரிப்புக்கான தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வேலை பார்ப்பவர் ஜனார்த்தன் குப்தா (40). இதே நிறுவனத்தில் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்க்கிறார். பி.ஜி. ஹாஸ்டலில் தங்கியிருந்தபடி வேலைக்கு வருவது இவரது வழக்கம்.
அழகில் மயங்கிய அதிகாரி
தியாவின் அழகில் மயங்கிய ஜனார்த்தன் குப்தாவுக்கு அவரை அடைய வேண்டும் என்ற காம எண்ணம் மேலோங்கியுள்ளது. இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் ஜனார்த்தன் குப்தா. இந்நிலையில், தியா அருமையாக மார்க்கெட்டிங் செய்து டார்கெட்டை எட்டிவிட்டதாக கூறிக்கொண்டு அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போவதாக அறிவித்தார் குப்தா.
சாப்பாடு விருந்து
பார்ட்டியை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 30ம்தேதி, எச்.எஸ்.ஆர் லேஅவுட் 3வது செக்டார், பி.டிஏ காம்ப்ளக்ஸ் அருகேயுள்ள 'பாரிகா மல்டிகசின் & கோஸ்டல் ஃபைன் டைன்' என்ற ஹோட்டலுக்கு சாப்பிட வருமாறு ஜனார்த்தன்குப்தா, தியாவை அழைத்துள்ளார். இதை நம்பி தியாவும் சென்றார். ஆனால் அலுவலகத்தில் வேறு யாரும் சாப்பாட்டு விருந்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லையாம்.
லிப்டில் பாலியல் சேஷ்டை
ஜனார்த்தன் குப்தாவும், தியாவும் சாப்பிட்டுவிட்டு லிப்ட் மூலமாக தரைத்தளத்துக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென தியாவின் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்ய ஆரம்பித்தார் ஜனார்த்தன் குப்தா. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து தியா மீளுவதற்குள் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சேஷ்டை செய்துள்ளார் குப்தா.
நிறுவன அதிகாரிகள் கைவிரிப்பு
லிப்ட் கீழே வந்ததும் அழுதபடியே அங்கிருந்து ஓடிய தியா, தனது அலுவலகத்தில் குப்தாவுக்கு அடுத்தமட்டத்தில் உள்ள நிர்வாகிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் சி.இ.ஓ பதவியில் உள்ள குப்தாவை எதிர்க்க துணியவில்லை. மூடி மறைக்க முற்பட்டுள்ளனர். நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிந்ததும், தியா தற்போது, எச்.எஸ்.ஆர் லே-அவுட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வலைவீச்சு
இதையடுத்து பெண்ணுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குப்தா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜனார்த்தன் குப்தாவை கைது செய்ய சென்றனர். ஆனால் விவரத்தை கேள்விப்பட்டு குப்தா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பெங்களூரில் தனியார் நிறுவன உயர் அதிகாரி ஒருவர், மார்க்கெட்டிங் பிரிவு பெண் ஊழியரிடம் தவறாக நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவமும் அந்த வாதத்துக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.