பெங்களூரில் பயங்கரம்: 4 வயது சிறுமியை பள்ளியில் வைத்து பலாத்காரம் செய்த ஆசிரியர்
பெங்களூர்: பெங்களூரில் 4 வயது சிறுமியை உடற்கல்வி ஆசிரியர் பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பெங்களூர் ஓசூர் ரோட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வரும் 4 வயது சிறுமி திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு வந்தபோது சோர்வாக இருந்துள்ளார். பெற்றோர் அவரிடம் என்னம்மா ஆச்சு என்று கேட்டபோது பள்ளியில் ஆள் இல்லாத அறையில் வைத்து உடற்கல்வி ஆசிரியர் ரோமியோ(25) தன்னை ஏதோ செய்ததாகவும், அதனால் பிறப்புறுப்பில் அதிகமாக வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அவரை செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் கோரமங்களாவில் தங்கியிருக்கும் ரோமியோவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பள்ளியில் உள்ள சிசிடிவி கேமராவில் ரோமியோ சிறுமியை அழைத்துச் சென்றது பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி பெங்களூர் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமியை காவலாளி பலாத்காரம் செய்ததால் பெற்றோர்கள் கொந்தளித்தனர்.
ரோமியோ உள்ளிட்ட 3 பேர் தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் கடந்த ஆறு மாதமாக அந்த பள்ளியில் பணியாற்றியுள்ளார். ரோமியோ மணிபூரைச் சேர்ந்தவர்.
முன்னதாக கடந்த ஆண்டு பெங்களூரில் பல்வேறு பள்ளகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.