அச்சுறுத்தும் வங்கி மோசடிகள்- தடுக்க இதோ புதிய திட்டம் அறிமுகம்!
டெல்லி: வங்கிகளில் மிகப் பெரிய அளவில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பதற்காக சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), அமலாக்கத் துறை ஆகியவை கூட்டாக இணைந்து புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன.
மேலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாசின், மும்பையில் செய்தியாளர்களிடம், "மிகப் பெரிய அளவிலான வங்கி மோசடிகளின் ஆணிவேர் எது என்பதையும், பணம் எப்படி கை மாற்றி விடப்படுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளோம்.

தற்போது பெரிய அளவிலான 10 மோசடிகளைக் கண்டறிந்துள்ள நிலையில் அந்தப் பணத்தை மீட்பது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்துள்ளோம். இதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மூன்று அமைப்புகளும் அந்தச் செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே செயல்படவுள்ளன.
மோசடியாளர்கள் எப்படி செயல்படுகின்றனர், எங்கு தவறு நிகழுகிறது, வங்கி நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது எப்படி என்பதை இந்த அமைப்புகள் புலனாய்வு செய்துள்ளன. நாளொன்றுக்கு ரூபாய் 65 லட்சத்தை தாண்டி பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளை எச்சரிக்கைப் பட்டியலில் வைக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு சிவிசி கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications