அர்னாப் கோஸ்வாமியால் வெட்கப்படுகிறேன்.. அவர் ஒரு பத்திரிகையாளரா? பர்க்கா தத் ஆவேசம்
டெல்லி: அர்னாப் கோஸ்வாமி சார்ந்துள்ள துறையை சேர்ந்தவள் என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுகிறேன் என்று மற்றொரு மூத்த பத்திரிகையாளரான பர்கா தத் காட்டமாக கருத்து கூறியுள்ளார்.
டைம்ஸ் நவ் செய்தி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. என்டிடிவியின் கன்சல்டன்ட் ஆசிரியர் பர்க்கா தத்.
ஆங்கில காட்சி ஊடகத்தை சேர்ந்த இவ்விரு முக்கிய பத்திரிகையாளர்கள் நடுவேயான பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடித்துள்ளது.
விவாத நிகழ்ச்சி
அர்னாப் கோஸ்வாமி தினமும் இரவு 9 மணிக்கு நியூஸ் ஹவர் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆங்கில செய்தி ஊடங்களில் நம்பர்-1 டிஆர்பி பெற்றது என்று டைம்ஸ் நவ் கூறிவருகிறது.
முனுமுனுப்பு
நியூஸ் ஹவர் நிகழ்ச்சியின்போது, அர்னாப் மிகவும் ஆக்ரோஷமாக சத்தம்போட்டு பேசுவார், பிறரை பேச விடுவதில்லை, தனது கருத்தை திணித்துக்கொண்டே இருப்பார் என்றெல்லாம் பல தரப்பிலும் முனுமுனுக்கப்பட்டதுண்டு.
பனிப்போர்
இதேபோலத்தான் பர்க்காதத்திற்கும், அர்னாப்பிற்கும் பனிப்போர் இருந்து வந்தது. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் இருவருமே தங்கள் டாக்-ஷோவில் மறைமுகமாக குத்திக் காட்டி பேசிக்கொண்டது உண்டு.
அர்னாப் குற்றச்சாட்டு
இந்நிலையில் நேற்றைய நியூஸ் ஹவர் நிகழ்ச்சி பர்க்கா தத்தை கோபப்படுத்தியுள்ளது. ஏனெனில், காஷ்மீரில் நடைபெற்ற கலவரத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் சப்போர்ட் செய்து வருகிறார்கள். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள், தேச விரோதிகள் என்று அர்னாப் குறிப்பிட்டார்.
பர்க்கா தத்திற்கு எதிராக
காஷ்மீரில் கலவரம் பாதித்த பகுதிகளை பர்க்கா தத் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அங்கிருந்தபடி, இந்திய ராணுவத்தின் கலவர அடக்குமுறைக்கு எதிராக கட்டுரைகளை எழுதினார். பாதிக்கப்பட்ட மக்கள் போட்டோக்களை வெளியிட்டார். எனவே, தேச விரோதி என்று தன்னை அர்னாப் குறிப்பிட்டதாக பர்க்கா தத் நினைக்கிறார்.
பர்க்கா தத் காட்டம்
இதுகுறித்து இன்று காட்டமாக பேஸ்புக்கில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் பர்க்கா தத். இவர் ஒரு பத்திரிகையாளரா? இவர் சார்ந்துள்ள துறையை நானும் சேர்ந்துள்ளேன் என்று கூற வெட்கப்படுகிறேன். அர்னாப் மோடியின் கையாள்.. இப்படி நீள்கிறது பர்க்கா தத் பேஸ்புக் பதிவு.