கிரிக்கெட் வாரிய இணையதளத்தை ஹேக் செய்த வங்கதேச 'புலி'!
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தை வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு விஷமி, ஹேக் செய்து அவதூறு வாசகங்களைப் போட்டு விட்டார். இதையடுத்து இணையதளத்தை மூடியுள்ள பிசிசிஐ பராமரிப்பு நடைபெறுவதாக ஒரு மெசேஜ் போட்டு வைத்துள்ளது.
திங்கள்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது http://www.bcci.tv/ என்ற கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்திற்குப் போனால் "Under maintenance" என்ற வாசகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

முன்னதாக ஹேக் செய்த நபர் "Hacked by Ashik" என்ற வாசகத்தைப் போட்டு வைத்திருந்தார். மேலும் About Us பக்கத்தில், வங்கதேச கிரிக்கெட் அணியின் படத்தையும், அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் கொடியையும் போட்டு வைத்திருந்தார். மேலும், "Don'T MesS UP WitH TiGeRs!" என்ற மிரட்டலையும் விட்டு வைத்திருந்தார்.
ஹேக் செய்த நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆஷிக் இக்பால் சை என்று தெரிய வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்ந்து பணிந்து போவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்படி இந்த ஆஷிக் செய்ததாக தெரிகிறது.
பிசிசிஐக்கு மட்டுமல்லாமல், கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் இந்த நபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications