கண்ணியமாக வெளியேற தயாராகுங்கள்- சோனியாவுக்கு மோடி அறிவுரை
டெல்லி: கண்ணியமாக வெளியேற சோனியாகாந்தி தயாராக வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனது 3டி பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். 3டி தொழில்நுட்பம் மூலம் பிரச்சாரம் செய்யும் யுத்தியை நரேந்திரமோடி ஆரம்பித்துள்ளார். 3டியில் ஒளிபரப்பப்பட்ட தனது பேச்சில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்துள்ளார்.
அவர் அதில் கூறுகையில்:
திருடுபவர்கள் யாரிடமும் எதையும் கேட்டுப் பெற வேண்டியதில்லை. மக்களிடம் நாங்கள் கேட்டுப் பெறுகிறோம். நீங்கள் ஏழைகளுக்கு என்று எதையுமே விட்டுவைத்ததில்லை. நாங்கள் எதையும் கொள்ளையடித்ததில்லை.
ஏழைகளிடம் இருந்து ‘யே தில் மாங்கே மோர்' என்று கேட்டுப் பெறுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஏழை குடும்பத்தை சேர்ந்த மகனான நான் ஏழைகளிடம் கேட்டுதான் பெற முடியும். காங்கிரஸ் கட்சியைப் போல் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க முடியாது.
இதற்கு முன்னர் தாயும், மகனும் (சோனியா-ராகுல்) என்னை மறைமுகமாக தாக்கி வந்தனர். தற்போது, நேரடியாகவே என் பெயரை குறிப்பிட்டு தாக்கிப் பேசி வருகின்றனர். ஒரு வேளை, நாட்டு மக்கள் என்னைப் பற்றி பேசுவதன் பாதிப்பு, இவர்களையும் தூண்டியிருக்கலாம்.
பெரிய பெயர், பெரிய பாரம்பரியம் கொண்டவர்களுக்கும், செயலாற்றலைத் தவிர எதுவுமே இல்லாத ஒரு டீ வியாபாரிக்கும் இடையில் நடக்கும் இந்த யுத்தத்தில் நாட்டு மக்கள் சரியான மதிப்பீட்டை அளிக்க உள்ளனர்.
இந்த தேர்தலில் நிறைய பிரபலங்கள் தோல்வியை தழுவப் போகின்றனர். 'சோனியா அவர்களே, கண்ணியத்துடன் வெளியேறுவதற்கு நீங்கள் தயாராக வேண்டும்' என்று மோடி பேசியுள்ளார்.