கிரண்பேடி விட்ட கண்ணீர் எல்லாம் வீணா போச்சே...
டெல்லி: இரும்புப் பெண் என்று வர்ணிக்கப்பட்ட கிரண்பேடி தேர்தல் பிரச்சாரத்தின் போது கண்கள் கலங்கி வாக்கு சேகரித்தார். அந்த கண்ணீருக்காக கூட அவரை டெல்லி மக்கள் ஜெயிக்க வைக்கவில்லை. அவருடன் சேர்த்து ஒட்டு மொத்த பாஜகவினரையும் புறக்கணித்து விட்டனர் டெல்லிவாசிகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக மூன்று பேர் தப்பியது அவர்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமாகவே இருக்க வேண்டும்.
கருத்துக்கணிப்புகளைப் பற்றி கவலைப்படவேண்டாம் என்று சொன்ன கிரண்பேடி, ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ள நிலையில், பாஜக பெற்ற தோல்விக்கு தான் தார்மீக பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். தன்னை தேர்வு செய்த கட்சி தலைமைக்கு நன்றி கூறிய அவர், தோல்விக்கு காரணமானதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

டெல்லியில் அவரது வீட்டின் முன் கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களத்தில் எனக்கும், கெஜ்ரிவாலுக்கும் எதிரான போட்டியில் யாராவது ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்தவகையில் கெஜ்ரிவால் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால், டெல்லி தேர்தல் முடிவுகளை வைத்து நரேந்திர மோடி ஆட்சியை கணிக்கக் கூடாது. தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த கட்சியும் பொறுப்பு ஆனால் அதேவேளையில் ஒரு கட்சி தோல்வியுற்றால் பிரதான வேட்பாளரே பொறுப்பாகமுடியும். எனவே, இத் தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இத் தேர்தலில் பாஜக 3 இடங்களை மட்டுமே வென்று மரண அடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications