மாட்டிறைச்சி விவகாரம்.. ஹரியானா முதல்வரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த அமித்ஷா
டெல்லி: மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, எம்.பி சாக்ஷி மகாராஜ் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாரதிய ஜனதாவின் தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளப்பிவிடப்பட்ட வதந்தியில் இக்லாக் என்ற முஸ்லிம் முதியவர் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், முஸ்லிம்கள் இந்தியாவில் வாழலாம். ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.. என்று கூறியிருந்தார்.
பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏ. சங்கீத் சாம், தாத்ரி சம்பவத்தில் அப்பாவிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். தொடர்ந்து இதுபோல் நடந்தால், கடந்த 2013-ம் ஆண்டு முசாபர்நகரில் ஏற்பட்ட கலவரம் போல், திருப்பி பதிலடி தருவோம் என்றார்.
இதேபோல் பாரதிய ஜனதாவின் சாக்ஷி மகராஜ் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனால் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் தலைவர்களை, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா நேற்று டெல்லிக்கு நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார். தாத்ரி சம்பவம் வேதனையானது, துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மோடி கூறிய பிறகு, சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. இனிமேல் இப்படி பேசக் கூடாது என்று அவர்களை அமித் ஷா கடுமையாக எச்சரித்தார் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications