மாவோயிஸ்டாக இருப்பது குற்றமல்ல- கைது செய்வதும் தவறு: கேரளா ஹைகோர்ட் அதிரடி!
திருவனந்தபுரம்: மாவோயிஸ்ட்டாக இருப்பதையே குற்றமாக கருதி ஒருவரை கைது செய்யக் கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் போலீசாரால் மாவோயிஸ்ட் என கைது செய்யப்பட்ட நபருக்கு நட்ட ஈடு வழங்கவும் கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பாலகிருஷ்ணன். இவரை மாவோயிஸ்ட் எனக் கூறி கேரளா போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்தனர்.

ஷியாம் பாலகிருஷ்ணன் தம்மை கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி முகமது முஷ்டாக், ஒருவர் மாவோயிஸ்ட் என்ற காரணத்தினால் அவரை போலீசார் கைது செய்யமுடியாது. தனிநபர் அமைப்பு என்ற முறையில் வன்முறையில் ஈடுபடுவது அல்லது வன்முறையை ஆதரிப்பது என்கிற போதுதான் சட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் .
மாவோயிஸ்ட் அரசியல் சிந்தனை நமது அரசியல் சாசன விதிமுறைகளுடன் ஒத்துபோகவில்லைதான். அதே நேரத்தில் ஒருவர் மாவோயிஸ்ட்டாக இருப்பது மட்டுமே குற்றம் அல்ல. கைது செய்யப்பட்டவர் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லை. இதனால் அவரை கைது செய்தது தவறு.
மேலும் ஷியாம் பாலகிருஷ்ணனுக்கு 2 மாதங்களில் ரூ.1லட்சம் அபராதமும், வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரமும் கேரளா அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications