மம்தா பானர்ஜியின் தலையை துண்டித்தால் ரூ.11 லட்சம் சன்மானம்.. பாஜக நிர்வாகியின் ஷாக் அறிவிப்பு
மம்தா பானர்ஜியின் தலையை துண்டிப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்குவதாக பாஜக தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை துண்டிப்பவர்களுக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி வழங்குவதாக பாஜக இளைஞரணி தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிர்பும் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டனர். அப்போது அதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. அதை மீறி பாஜகவினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது கூட்டத்தினரை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
இதைக் கண்டித்து அந்த மாநில பாஜக இளைஞரணித் தலைவர் யோகேஷ் வார்ஷ்னே தெரிவிக்கையில், மம்தா பானர்ஜி அரசு சரஸ்வதி பூஜை, ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி உள்ளிட்ட ஊர்வலங்களை அனுமதிப்பதில்லை. மாறாக பாஜகவினர் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்த உத்தரவிட்டுள்ளது.
அவர் இப்தார் நோன்புக்கு அனுமதித்து முஸ்லிம் மக்களை ஆதரிக்கிறார். எனவே மம்தாவின் தலையை துண்டித்து கொண்டு வந்து கொடுத்தால் அந்த நபருக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றார் யோகேஷ். இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணனூரில் பாஜகவினர் மீதான மார்க்சிஸ்ட் கட்சியினரின் படுகொலையை கண்டிக்கத் தவறும் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனின் தலையை துண்டிப்பவர்களுக்கு தன் சொத்தை விற்றாவது ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் உஜ்ஜயின் குந்தன் சந்திரவாட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.