தேர்தலில் தோற்றால்... மம்தா பானர்ஜியை கொல்ல பாஜக சதி.... மேற்கு வங்க அமைச்சர் பகீர் தகவல்!
கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து விட்டால், மம்தா பானர்ஜியை கொல்ல பாஜக திட்டமிடலாம் என மேற்கு வங்க அமைச்சர் பரபரப்பாக பேசியுள்ளார்.
அண்மையில் மேற்கு வங்கம் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்பு மத்திய பாஜக அரசு மற்றும் மேற்கு வங்க அரசு இடையேயான மோதல் அதிகரித்து உள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் சென்றார். அப்போது நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் மாநில பாஜக பிரமுகர் கைலாஷ் விஜய்வர்கியா காயம் அடைந்தார். நல்ல வேளையாக ஜே.பி.நட்டாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பத்துக்கு பிறகு மத்திய பாஜக அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சியில் குண்டர்கள் ஆதிக்கம் பெருகி விட்டதாக அமித்ஷா, ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்கள். மாநில சட்டம் ஒழுங்கு குறித்து பதில் அளிக்கும்படி மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபிக்கு உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதற்கு பதில் சொல்ல முடியாது என மேற்கு வங்க அரசு பதிலடி கொடுத்தது. அமித்ஷா மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சிப்பதாக மேற்கு வங்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு கல்தா.. அசத்திய பாஜக
இந்த நிலையில் மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்ல பாஜக சதி செய்து வருவதாக அந்த மாநில அமைச்சர் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளார்.கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி கூறுகையில், மம்தா பானர்ஜி அரசை எதிர்த்து வரும் பாஜக, முறைகேடு செய்வது வரும் சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற துடிக்கிறது. இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால், ரகசியமாக சிலரை அனுப்பி மம்தா பானர்ஜியை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டலாம் என்றார். இவ்வாறு மேற்கு வங்கத்தில் பாஜக-மேற்கு வங்க அரசு இடையேயான மோதல் வலுவடைந்து வருகிறது.