ஆசிரியை.. சகோதரியை கயிறுகட்டி தரதரவென இழுத்துச்சென்ற திரிணாமுல் காங்.தலைவர்.. மே.வங்கத்தில் ஷாக்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் தலைமையிலான ஒரு குழுவினர் ஆசிரியை ஒருவரை முழங்காலில் காயிற்றால் கட்டி அவரை சாலையில் தரத்தரவென இழுத்து செல்கிறார்கள். அதற்கு அவரது தங்கை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரையும் அடித்து தரையில் போட்டு முழங்காலில் கயிற்றை கட்டி இழுத்து செல்கிறார்கள். இந்த பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினச்பூர் மாவட்டம் கங்காராம்பூர் அருகே பதா நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்மிரிகோனா தாஸ், இவர் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றுகிறார். இவரது தங்கை சோமா தாஸ். இவர்கள் தெருவில் 12 அடிக்கு சாலை போடுவதாக பஞ்சாயத்து நிர்வாகம் சொல்லியிருந்தது.

24 அடி கேட்டார்கள்
அதற்கு இடத்தை தருவதற்கு ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் சம்மதித்து இருந்தார். இந்நிலையில் 12 அடிக்கு பதில் 24 அடியில் சாலை அமைக்க முடிவு செய்திருப்பது பின்னர் அவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் ஆசிரியை சம்மதிக்கவில்லை.

பஞ்சாயத்து தலைவர்
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பதா நகர் கிராம பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்கார் (திரிணாமுல் உள்ளூர் தலைவர்) மற்றும் அவரது ஆதரவாளர்கள் புல்டோசருடன் வந்து அந்த பகுதியில் வீடுகளை இடித்து சாலைக்கு தேவையான இடத்தை மீட்க வந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர்.

கயிறு கட்டி இழுப்பு
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆசிரியை கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்தார். அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்கார் தலைமையிலான சில ஆண்கள் ஆசிரியை வலுக்கட்டாயமாக தூக்க முயன்றனர். அப்போது அவரை அடித்து அவரது காலில் கயிற்றை கட்டி தரத்தரவென்று அங்கிருந்தவர்கள் இழுத்து சென்றனர்.

தரையில் இழுத்தனர்
இதற்கு அவரது தங்கை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரையும் அடித்து உதைத்து கயிற்றை முழங்காலில் கட்டி இழுத்து சென்றனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆசிரியரின் தங்கை முதலுதவி சிகிச்சைக்குப்பின் சரியாகிவிட்டார். ஆசிரியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வீடியோ வைரல்
இந்நிலையில் ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் நேற்று இரவு வரை யாரையும் கைது செய்யவில்லை இதனிடைய பெண்கள் முழங்காலில் கயிறு கட்டி இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாக கூறி பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை மாவட்ட மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications

























