குண்டு வெடிப்பில் இறந்த பவானி உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னைக்கு அனுப்பி வைப்பு!
பெங்களூரு: குண்டுவெடிப்பில் பலியான சென்னை பெண்மணி பவானி தேவியின் உடல் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம், பவானிதேவி உடல் சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு சர்ச் தெரு பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற குண்டுவெடிப்பில் சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த பாலன் என்பவரின் மனைவி பவானி தேவி உயிரிழந்தார். விடுமுறைக்காக தனது 15 வயது மகன் மற்றும் 11 வயது மகளுடன் விருந்தினர் வீட்டுக்கு வந்திருந்த பவானி குண்டுவெடிப்பில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சென்னையில் இருந்த பாலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலன் மற்றும் குடும்பத்தார் இன்று பெங்களூர் வந்தனர்.

பவானி உயிரிழந்த மல்யா மருத்துவமனையில் உறவினர்கள் வந்து குவிந்தனர். பவானியின் உடலை பார்த்து அவர்கள் அழுது புலம்பினர். இதனால் அந்த பகுதியே சோகமயமானது. குறிப்பாக, பவானியின் இரு குழந்தைகளும் தாயை பிரிந்த சோகத்தில் கதறி அழுததை பார்ப்போர் கண்களும் குளமாகின. விடுமுறையை கொண்டாட சென்ற தனது மனைவி பவானி, சென்னைக்கு திரும்பாமலே போவார் என்று எதிர்பார்க்கவேயில்லை என்று பாலன் கண்ணீர் மல்க கூறினார்.
இதனிடையே, மல்யா மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் முடிந்துவிட்டதால், பிரேத பரிசோதனைக்காக, பவானியின் உடல் சாம்ராஜ்நகர் பகுதியிலுள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு, சுமார் 2.30 மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்தது. டாக்டர் வெங்கட்ராவ் தலைமையிலான 4 பேர் டாக்டர் குழு பிரேத பரிசோதனை நடத்தியது. பவானி தேவியின் உடலில் வெடிகுண்டிலிருந்து வெளிக்கிளம்பிய இரும்பு ஆணிகள், போல்டுகள் இருந்துள்ளன. குறிப்பாக பவானியின் தலைப்பகுதியில் இரும்பு துகள்கள் புகுந்து அவரது மண்டை ஓடு உடைந்துள்ளது. அதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது, மூளைக்கு செல்லும் ரத்தமும் தடை பட்டுள்ளது. இதனால்தான் பவானி தேவி, சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
எனவே பிரேத பரிசோதனையை தொடங்கும் முன்பாக பவானி தேவியின் உடலை முற்றிலுமாக ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள், எங்கெல்லாம் இரும்பு துண்டுகள் இருந்தன என்பதை அறிக்கையாக தயார் செய்துள்ளனர். அதன்பிறகே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது உடலுக்குள் இருந்து இரும்பு துண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, போலீசார், வழக்கு தொடர்பான மகஜர் தயாரித்தனர். இந்த நடைமுறைகள் முடிந்த பிறகு மதியம் 2 மணியளவில், பவானி தேவியின் உடல், கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் பார்ப்பதற்காக சில மணி நேரம் பவானி தேவியின் சடலம் ஆஸ்பத்திரி வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது முகத்தை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதன்பிறகு கர்நாடக அரசு ஏற்படுத்தி கொடுத்த சிறப்பு ஆம்புலன்ஸ்சில் பவானி தேவியின் உடலை ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸ்சில் பவானி தேவியின் கணவர், குழந்தைகள், உறவுக்காரர்கள் சிலர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மற்ற உறவுக்காரர்கள் வேறு வாகனங்கள் மூலம் சென்னை சென்றனர். சென்னையிலுள்ள பவானி தேவியின் வீட்டுக்கு உடல் சென்று சேரும் வரையில் ஆம்புலன்ஸ் பாதுகாப்புக்காக ஒரு ஜீப்பில் பெங்களூரு போலீசார் சிலரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications