பெங்களூரில் 2 மாதங்களாக தொடரும் மழை.. 115 வருட சாதனை முறியடிப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் 115 வருடங்களுக்கு பிறகு அதிகப்படியான மழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்னும் சுமார் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், இவ்வாண்டு மழை பொழிவு பெரும் சாதனைகளைபடைக்க வாய்ப்புள்ளது.
பெங்களூரில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை வெயில் காலம், மாலை 6 மணி முதல் இரவு வரை மழைக்காலம், அதிகாலை முதல் குளிர்காலம் என்று வாட்ஸ்அப் வைரல் மெசேஜ் சுற்றும் அளவுக்கு ஒரே நாளில் 'முக்காலத்தையும்' உணர்த்தும் ஞானியாக மாறிவிட்டது ஐடி தலைநகரம்.
தினமும் மாலை 6 மணிக்கு மேல் பெய்யும் மழை நள்ளிரவு வரை நீடித்து, புது சாதனைகளை தகர்த்து வருகிறது. கடந்த இரு நாட்களாக பகலிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் நகரவாசிகள் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டுள்ளனர்.

சாதனை மழை
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திரதினத்தன்று, 3 மணி நேரத்திற்குள் 180 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. ஒரு நாளில் பெய்த மழை என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் காலத்தில் 1890ல்தான் இப்படி ஒரு மழையை நகரம் எதிர்கொண்டது. அதன்பிறகு கடந்த மாதம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக செப்டம்பர் மாத மழையும் அந்த மாதத்தில் அதுவரை இல்லாத அளவுக்கான சாதனையை பதிவு செய்தது.
Recommended Video


இரவு, பகல் பாராத மழை
அக்டோபர் பிறந்த பிறகும் மழைவிடுவதாக இல்லை. இம்மாதம் தொடக்கத்தில் இரவில் மட்டும் பெய்த மழை இப்போது பகலிலும் தூரல் முதல் கன மழை வரை அதன் விருப்பம்போல பெய்து கொட்டுகிறது. ஆக மொத்தத்தில் கடந்த சனிக்கிழமை காலை வரையில் பெங்களூரில் 1,615.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 115 வருடங்களுக்கு பிறகு ஓராண்டில் பெங்களூரில் பெய்த பெரிய மழையளவு இதுவாகும்.

மழை அரசியல்
பெங்களூரில் மழை காரணமாக சாலைகளில் குண்டு, குழி ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசை தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ள கர்நாடகாவிலுள்ள அரசியல் கட்சிகள் இதை அரசியல் பிரச்சினையாக கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசும், முடிந்த அளவுக்கு குண்டு, குழிகளை மூட அவசர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் மழையால் சாலைகள் தொடர்ந்து அரித்துச் செல்லப்படுவதால் அரசு தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது.

முதல்வர் கண்டனம்
மழை சார்ந்த விபத்துகளில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், இவ்வருடம் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. 47 நாட்களாக தொடர்ந்து மழைதான் பெய்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் சாவை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது. அரசின் முதல் நோக்கம், மக்களுக்கு தேவையான நிவாரணத்தை அளிப்பது மட்டும்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications