பெங்களூரில் நடுரோட்டில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது யார் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் நடுரோட்டில் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபர் ஒரு டாக்சி டிரைவர் என்பது அடையாளம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பெங்களூரில் பெண்களை கடத்துபவர்கள் சாலையில் செல்போனில் பேசிக் கொண்டே செல்பவர்களை குறி வைப்பதாக போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் பனசங்கரி அருகே உள்ளது கத்ரிகுப்பே. அந்த பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருப்பவர் மணிப்பூரை சேர்ந்த சமீரா(25 வயது, பெயர் மாற்றப்பட்டுள்ளது.) அவர் கடந்த 23ம் தேதி தனது விடுதிக்கு முன்பு நின்று கொண்டிருக்கையில் வாலிபர் ஒருவர் அவரை தூக்கிச் சென்று நடுரோட்டில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் பெங்களூர் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
கைது
சமீராவை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றவர் கனகபுரா ரோட்டை சேர்ந்த டாக்சி டிரைவர் அக்ஷய்(24) என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து திங்கட்கிழமை இரவு அக்ஷய் கைது செய்யப்பட்டார்.
செல்போன் பேச்சு
நண்பர் ஒருவருடன் வாகனத்தில் வந்த சமீரா விடுதிக்கு அருகில் இறங்கிக் கொண்டார். விடுதிக்கு நடந்து செல்கையில் செல்போன் அழைப்பு வரவே அவர் யாருடனோ பேசுகையில் தான் அக்ஷய் அவரை தூக்கிச் சென்றார்.
எச்சரிக்கை
பெங்களூரில் பெண்களை கடத்துபவர்கள் சாலையில் செல்போனில் பேசிக் கொண்டே செல்பவர்களை குறி வைப்பதாக போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றி நடப்பதை கவனிக்காமல் சாலையில் செல்கையில் மும்முரமாக செல்போனில் பேசிக் கொண்டே செல்ல வேண்டாம் என்று போலீசார் பெண்களை எச்சரித்திருந்தனர்.
உதவ ஆளில்லை
அந்த நபர் என்னை தூக்கிச் செல்கையில் உதவி கேட்டு கத்தி கதறினேன். ஆனால் அந்த வழியாக சென்ற ஒருவர் கூட எனக்கு உதவி செய்யவில்லை. மாறாக ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்த்தனர் என்கிறார் சமீரா.