விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது: தோழியை அடைய மனைவியை கொன்றது அம்பலம்
பெங்களூரு: பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான பொறியியல் பட்டதாரி வாலிபர், தனது தோழியை திருமணம் செய்து கொள்வதற்காக இந்த படுபாதக செயலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக தோழியின் கணவர் மீது பழி போட்ட கோகுல், தனது மனைவியையும் கொலை செய்து விட்டு யதேர்ச்சையாக இறந்து போனதாக நாடகம் ஆடியுள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
தோழியை அடைவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் பல்வேறு சதித்திட்டங்கள் நடத்தி உள்ள அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன. இதுகுறித்து கோகுல் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்
செப்டம்பர் 5ம் தேதி கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் டெல்லி மற்றும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையங்களில் 6 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்' மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து இந்த 2 விமான நிலையங்களில், விமானங்களில் வெடிகுண்டு உள்ளதா? என்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும், புறப்பட்டு சென்ற சில விமானங்களும் மீண்டும் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவை வெறும் புரளி என்பது சோதனைக்கு பின் தெரிய வந்தது.

சிக்கிய வாலிபர்
இதையடுத்து போலீஸார் ஜோசப்பை கடந்த சனிக்கிழமை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் சிம் கார்டு தன்னுடையது அல்ல என உறுதிபட தெரிவித்தார். மேலும் மிரட்டல் விடுக்கப்பட்டபோது பதிவான குரலும், ஜோசப் குரலும் மாறுபட்டதாக இருந்தது. எனவே அவரது பெயரைப் பயன்படுத்தி வேறு யாரோ இத்தகைய குற்றத்தை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

எழுந்த சந்தேகம்
இது தொடர்பாக ஜோசப்பின் நண்பர்களிடமும், அண்டை வீடுகளில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவைச் சேர்ந்த கம்யூட்டர் பொறியாளரான கோகுல் மீது சந்தேகம் வலுத்தது. ஏனென்றால் நண்பர்களான ஜோசப்பும், கோகுலும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். கோகுல் அடிக்கடி ஜோசப் வீட்டுக்கு சென்று வருவதும் தெரியவந்தது.

தோழியின் மீது ஆசை
எனவே கோகுலிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, "ஜோசப்பின் மனைவி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. அவரை வசப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜோசப்பை சிக்க வைக்க திட்டமிட்டேன். எனவே அவரது பாஸ்போர்ட் மற்றும் புகைப்படங்களை திருடி அவரது பெயரில் சிம் கார்டு வாங்கினேன்.

தீவிரவாதி போல சித்தரிப்பு
அந்த எண்ணில் இருந்து டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். இந்த வழக்கில் ஜோசப் சிக்கினால், அவரது மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என திட்டமிட்டே இவ்வாறு செய்தேன். மேலும் அவரது பெயரில் போலி ஃபேஸ்புக் ஆரம்பித்து, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராக சித்தரித்தேன். இவ்வாறு செய்தால் சைபர் க்ரைம் போலீஸார் அவரை கைது செய்வார்கள் என நம்பினேன்" என தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளாக சதி
இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் பல்வேறு சதித்திட்டங்கள் நடத்தி உள்ள அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன. போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மைகளை கக்கிய கோகுல், அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். ''கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், எனது நண்பர் மனைவியும் 12 ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் என்ஜீனியரிங் கல்லூரியிலும் ஒன்றாக படித்தபோது எங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். அவர் திருச்சிக்கு சென்றுவிட்டார்.

அனுராதா உடன் திருமணம்
டெல்லியில் எனக்கு கம்ப்யூட்டர் என்ஜீனியரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, நாங்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். அதே ஆண்டில் என் தோழிக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் என் தோழி தனது கணவருடன் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தார்.

விவாகரத்துக்கு முயற்சி
இதற்கிடையே எனக்கும், அனுராதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருந்தேன். இந்நிலையில், என் மனைவி அனுராதாவிற்கும், அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதில் நான் அதிர்ச்சி அடைந்தேன். அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

கொலை செய்ய முயற்சி
இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு என் தோழியுடன் மீண்டும் ‘பேஸ்புக்' மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். அவருடன் நான் நெருங்கி பழக முயன்றேன். ஆனால் அதற்கு என் தோழி இடம் கொடுக்கவில்லை. அவளை அடைவதற்கு எனது மனைவியும், தோழியின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

தோழியின் கணவருடன் நட்பு
கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டேன். உடனே நான், என் தோழி குடியிருக்கும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து எனது மனைவியுடன் தங்கினேன். தோழியின் கணவருடன் பழகி நண்பனாக்கிக் கொண்டேன். அதை வைத்து தோழியின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன்.

தலையில் அடித்து கொலை
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி நான், எனது மனைவியுடன் மீண்டும் ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, உங்களுக்காக நான் சிறப்பு பூஜை செய்ய உள்ளேன். இதனால் நீங்கள் குடிபோதையில் இருக்க வேண்டும் என்றேன். இதை உண்மை என நம்பிய அனுராதா அரை பாட்டில் அளவுக்கு மதுபானம் அருந்தி மிதமிஞ்சிய போதையில் இருந்தாள். அதோடு மீண்டும் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்தாள். இதில் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.

மர்ம மரண வழக்கு
கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா போலீசில் மர்மசாவு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுராதாவின் கள்ளக்காதல் விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களை எனது மாமானாரிடம் காட்டியதால் அவரும் அதை உண்மை என நம்பி என் மீது சந்தேகப்படவில்லை.

கடிதம் எழுதி மிரட்டல்
அனுராதா இறந்த பின்னர் தோழியை அடைய முயற்சித்தேன். முதலில் பெங்களூர் பிஷப் எழுதுவதுபோல தோழிக்கு கடிதங்கள் எழுதினேன். முதலில் தோழிக்கு சாதகமான கடிதங்களை எழுதி நம்பவைத்து, இறுதியாக உனது கணவரை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். இதேபோல் தோழியின் கணவருக்கும் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு என்று கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

போலி சிம்கார்டு
அடுத்ததாக தோழியின் கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து திருடினேன். அதை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு வாங்கினேன். அதேபோல் அவரது பெயரிலேயே ஒரு புதிய செல்போனும் வாங்கினேன். பெங்களுரு விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்க, போன் செய்த போது யாரும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் கோகுல் வாக்கு மூலம் தெரிவித்துள்ளான்.
மேலும் 3 விமான நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வாட்ஸ் அப்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

தோழியின் கணவருக்கு சிறை
அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு ‘வாட்ஸ்-அப்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், போலீசார் தோழியின் கணவரை கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து அந்த செயலை செய்தேன். ஆனால், போலீசாரிடம் நான் நான் மாட்டிக் கொண்டேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் கோகுல். இந்த வாக்கு மூலத்தைக் கேட்டு பெங்களூரு போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

கொலை வழக்காக மாற்றம்
வெடிகுண்டு மிரட்டல் வழக்கு தற்போது கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அனுராதா மர்ம சாவு வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோகுலை 2 வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கோகுலிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

10 லட்சம் டாலர் நஷ்டம்
டெல்லி, பெங்களூரு விமான நிலையங்களுக்கும், சர்வதேச விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் மூலம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சுமார் 10 லட்சம் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை நம்முடைய நாடே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய அணுகுமுறை வன்மையாக தண்டிக்க தக்கது என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆயுள் தண்டனைக்கு வாய்ப்பு
கைதாகியுள்ள கோகுல் மீது நாட்டின் அமைதி, பொதுமக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications