பெங்களூர் மாநகராட்சிக்கு நாளை தேர்தல்! பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி
பெங்களூர்: தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் மாநகராட்சிக்கு, நாளை தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியை கைக்குள் வைத்துள்ள பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்குமா அல்லது, மாநிலத்தில் அதிகாரத்திலுள்ள காங்கிரஸ் கைப்பற்றுமா என்பது வாக்காளர்கள் மத்தியிலுள்ள பரபரப்பு பேச்சாக மாறியுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி 198 வார்டுகளை கொண்டது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக காங்கிரஸ் வைவசம் தொடர்ந்து இருந்து வந்த மாநகராட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், நாளை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் முழு அளவில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பி.என்.ஸ்ரீநிவாச்சாரி அறிவித்துள்ளார். இதில் பொம்மனஹள்ளி பகுதியிலுள்ள ஹொங்கசந்திரா வார்டில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். எனவே எஞ்சிய 197 வார்டுகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெங்களூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை 73 லட்சத்து 88 ஆயிரத்து 256 பேராகும். கடந்த மாநகராட்சி தேர்தலில் 44 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவானது. இம்முறை வாக்குப்பதிவு எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்து வருகிறது.
வாக்குப்பதிவுக்காக நகரில் 6759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் ஒட்டுமொத்தமாக யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்களே பெரும்பாலான வார்டுகளில் வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில, பாஜகவுக்கே வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு இது கவுரவ பிரச்சினை என்பதால் அக்கட்சி தீவிர வாக்குவேட்டையாடி வருகிறது. தேவகவுடாவின் மஜத 3வது இடம்பிடிக்கும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications