லதா மங்கேஷ்கரின் பாரதரத்னாவைப் பறிக்க உங்கள் பாட்டன் சொத்து இல்லை: காங்.குக்கு சிவசேனா பதிலடி
மும்பை: பாடகி லதா மங்கேஷ்கரின் பாரத ரத்னா விருதை பறிக்க அது ஒன்றும் உங்கள் தாத்தா வீட்டு சொத்து இல்லை என்று சிவசேனா மற்றும் பாஜக காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை திறப்பு விழா இந்த மாத துவக்கத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். மோடி பிரதமராக நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். இது தான் அனைவரின் விருப்பமும் கூட என்றார்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மும்பை மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜனார்தன் சந்துர்கர் பேசியதாவது,

அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கலைஞர்களின் பத்ம விருதுகளை அவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அரசு அந்த விருதுகளை பறிக்க வேண்டும் என்றார்.
இது குறித்து சிவசேனா தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவ்த் கூறுகையில், இந்த விருதுகள் ஒன்றும் சந்துர்கரின் தாத்தா வீட்டு சொத்து இல்லை. ஒரு தனி நபரின் திறமையை பாராட்டி அரசு வழங்கியது. இசைத் துறையில் லதாஜியின் சாதனைகளை பார்த்து அரசு அவருக்கு பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை வழங்கியுள்ளது. அரசு விருது கொடுப்பதால் அதற்கு அடிமையாக முடியாது. லதாஜி உள்பட விருது பெற்ற அனைவருக்கும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை உள்ளது. விருதுகளை திருப்பிக் கொடுக்கச் சொல்வது விந்தையானது. லதாஜியை பிடிக்கவில்லை என்றால் சந்துர்கர் அவரது பாடல்களை கேட்பதை நிறுத்த வேண்டும் என்றார்.
சந்துர்கர் பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் அதுல் ஷா கூறுகையில், லதா மங்கேஷ்கருக்கு அவரது கருத்தை தெரிவிக்கும் உரிமை உள்ளது. அவரை நச்சரிப்பது தவறு என்றார்.












Click it and Unblock the Notifications