இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கிறார்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
டெல்லி: இந்தியாவிலிருந்து தீண்டாமை முற்றிலுமாக அளிக்கப்பட்டு விட்டதாக ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இன்னமும் நான்கில் ஒருவர் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வுசிக் கழகம் ( National Council of Applied Economic Research - NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், தீண்டாமை குறித்து நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது.

விழிப்புணர்வு, சட்டம், கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீண்டாமை களையெடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வருவதை இல்லை என்கிறது இந்த ஆய்வு.
கடந்த 2011- 12 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பொதுமக்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டது.
அதாவது, 1. உங்களது வீடுகளில் தீண்டாமை நடைமுறையில் உள்ளதா? 2. உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் பட்டியல் இனத்தவர் நுழையவும், பாத்திரங்களைப் பயன்படுத்தவும் அனுமதிப்பீர்களா? என ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் கேட்கப்பட்டது.
இதற்கு ஆய்வில் பங்கெடுத்த நான்கில் ஒருவர், தீண்டாமையைக் கடைபிடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முழு விபரமும் தொகுப்பாக அடுத்தாண்டு வெளியிடப்படும் எனத் தெரிகிறது, தற்போதைக்கு ஆய்வுத் தகவல்கள் புள்ளி விபரங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சாதி அடிப்படையில் 27 சதவீதத்தினர் தீண்டாமை இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.
மாநிலவாரியாகப் பார்த்தால் வடமாநிலங்களில், மத்தியப் பிரதேசம் 53 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 43 சதவீதமும்,இமாச்சலில் 50 சதவீதமும், சத்தீஸ்கரில் 48 சதவீதமும்,ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 47 சதவீதமும், உத்தரகாண்டில் 40 சதவீதமும் `தீண்டாமை`இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இதேபோல், தென் மாநிலங்களில் ஆந்திரப்பிரதேசத்தில் 10 சதவீதம் மட்டுமே தீண்டாமை உள்ளதாக கூறும் இந்த ஆய்வு, மேற்கு வங்காளத்தில் ஒரு சதவீதமும்,கேரளாவில் 2 சதவீதமும் தீண்டாமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அமித் தோரட், "சமூக அடிப்படையில் சாதிய உணர்வு, மக்களோடு ஒன்றி கலந்து உள்ளது. சமுதாயத்தில் இருந்து தீண்டாமையினை அகற்றுவது கடினமே" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆய்வின் மூலம் கல்வி பெற்ற மக்களிடையே சாதியின் தாக்கம் குறைந்துள்ளதையும், பணம் படைத்தவர்களிடமே தீண்டாமையை செயல்படுத்தும் எண்ணம் மேலோங்கி இருப்பதையும் அமித் சுட்டுக் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications