மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வொர்க் சிக்கியது! தெலுங்கானாவில் ரூ.12,000 கோடி மதிப்பிலான MD பறிமுதல்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய போதைப்பொருள் உற்பத்தி கும்பலை சேர்ந்த ஐஐடி பட்டதாரி உட்பட 12 பேர் மஹாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆண்டில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் ரெய்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பகுதி மீராபயேந்தர் நகர போலீசார் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை கைது செய்தனர். அந்த நபரிடமிருந்து சுமார் 200 கிராம் எடையும் 25 லட்ச ரூபாய் மதிப்பும் உள்ள எம்டி ரக போதைப் பொருளை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தன.

அந்த நபருக்கு, போதைப் பொருளின் உற்பத்தி மையமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள செர்ல்லப்பள்ளியில் இருந்து போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. செர்லப்பள்ளியில் உள்ள தொழில் பேட்டையில் ரசாயன தயாரிப்பு நிறுவனம் என்ற போர்வையில் போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்று வந்துள்ளது.
அங்கு தீவிரமாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, தக்க நேரம் பார்த்து போதைப்பொருள் உற்பத்தி செய்து வந்த அந்த தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எம்டி ரக போதைப் பொருள், 32 ஆயிரம் லிட்டர் ரசாயனங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்த தொழிற்சாலை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான ஐஐடி பட்டதாரி உட்பட 12 பேரை கைது செய்துள்ளனர். தொழிற்சாலையின் உரிமையாளரும் ரசாயன நிபுணருமான ஸ்ரீனிவாஸ் வலோட்டி, கூட்டாளி தனாஜி பேட் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஐஐடி பட்டதாரி, தனது அறிவைப் பயன்படுத்தி போதைப்பொருள் தயார் செய்து நாடு முழுவதும் பெரிய நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த கும்பலுக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான போதைப் பொருட்கள் உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் ஏஜெண்ட்கள் மூலம் மும்பைக்கு சப்ளை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் போதைப்பொருள் தயாரிப்பதற்காகவே ரசாயன தொழிற்சாலை என்ற போர்வையில் போலியான தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் போதைப்பொருள் விநியோகச் சங்கிலிக்கு இந்த கைது நடவடிக்கை ஒரு பெரிய அடி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலை சீல் வைக்கப்பட், இந்த கும்பலின் பரந்த நெட்வொர்க்கை கண்டறிய மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications