ஷாக்கிங்.. அதானி குழுமம் உட்பட பெரும் தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன் அளவை பாருங்க!
Recommended Video
டெல்லி: வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாதது வாரா கடன் என அழைக்கப்படுகிறது. இந்திய வங்கித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக NPA என்று அழைக்கப்படும் இந்த வகை கடன்கள் மாறிவிட்டன.
வாரா கடன் என்றதுமே, விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர்தான் நமக்கு நினைவுக்கு வருவார்கள். ஆனால் அதைவிட பெரிய முதலைகள் இன்னும் சுதந்திரமாக நீந்தியபடிதான் உள்ளன.
அப்படிப்பட்ட ஒருவர்தான் கவுதம் அதானி என்கிறார் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. சமீபத்தில் வெளியிட்ட டிவிட் ஒன்றில், அதானி குரூப் சேர்மனான கவுதம் அதானி, கடன் வாங்கி திரும்ப செலுத்தாத பெரிய புள்ளி என அவர் குறிப்பிட்டிருந்தார்.
|
அதானி குழுமம்
கவுதம் அதானி வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இழுத்தடிக்கிறாரோ என்னவோ, ஆனால், அதானி குழுமம் வங்கிகளில் வாங்கிய கடன் அளவோ மிக பெரியது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான நிலவரப்படி அதானி பவர் நிறுவனம் ரூ.47,609.43 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் கடன் மதிப்பு ரூ.8356.07 கோடியாக இருந்தது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கடன் மதிப்பு ரூ.22424.44 கோடியாக இருந்தது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு, ரூ.20791.15 கோடியாக இருந்தது.
நிறுவனங்கள்
அதானி மட்டுமல்ல மேலும் பல்வேறு நிறுவனங்களும் இவ்வாறு கடனை வாங்கி குவித்துள்ளன. CIBIL அமைப்பின் புள்ளி விவர தகவல்படி, திரும்ப செலுத்தாத வராக் கடன்கள் மதிப்பு ரூ.111,738 கோடியாகும். மொத்தம் 9339 கடனாளிகளால் இந்த நிலை உருவாகியுள்ளது. இதில் அரசு துறை வங்கிகளின் வராக்கடன் மதிப்பு ரூ.93,357 கோடி. 7564 கடனாளிகள் அரசு துறை வங்கிகளில் கடன் பெற்றவர்கள்தான்.
அதிக வாராக்கடன்
இம்மாதம் வரையிலான நிலவரப்படி எஸ்சார் ஸ்டீல் நிறுவனம் ரூ.8173.05 கடன் பாக்கி வைத்துள்ளது. லேன்கோ இன்ஃப்ராடெக் நிறுவனம் ரூ.43501.75 கடன்பாக்கியும், பூஷன் ஸ்டீல் நிறுவனம் ரூ.46263.23 கடன் பாக்கியும் வைத்துள்ளன. இதுபோல பல நிறுவனங்கள் பாக்கி வைத்துள்ள கடன் தொகை வாய் பிளக்க வைக்கும்.
மல்லையாவை கவனித்தோம்
மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் மீதே மீடியாக்கள் கவனம் உள்ள நிலையில், இதுபோல பலராலும் வங்கிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதை மறுக்க முடியாது. 2016ல் மல்லையா நாட்டை விட்டு ஓடிப்போனபோதுதான் மல்லையா விவாதப்பொருளானார். ஆனால், அதற்கு 4 வருடங்கள் முன்பே வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.9000 கோடி கடன் பாக்கி இருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.
சிறு முதலைகள்
நீரவ் மோடி, ரோட்டோமேக் பேனா அதிபர் விக்ரம் கோத்தாரி என வராக் கடன் விஷயங்களில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மிக தாமதமாகவே நடவடிக்கைகளை எடுக்கிறது. மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் பிற கடனாளிகளை ஒப்பிட்டால் சிறு முதலைகள்தான். ஆனால் தப்பி ஓடியபிறகே அவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது என்பது வேதனையான உண்மை.