பீகாரில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ: 8 பேர் உடல் கருகி பலி; 12 பேர் படுகாயம்
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பேருந்து தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உடல் கருகி பலியாகினர்.
நாளந்தா: பீகாரில் ஓடும் பேருந்தில் தீப்பற்றிய விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து ஷேக்புரா பகுதிக்கு 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. விஸ்வகர்மா சவுக் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது .பேருந்தின் என்ஜினில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியது.
உடனடியாக தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் தீக்கிரையானது. இந்த விபத்தில் 8 பேர் தீயில் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் கண்ணாடி ஜன்னலை உடைத்து குதித்து தப்பியுள்ளனர். இந்த விபத்தில் 12-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.