பீகார் தேர்தல் தேதி வந்தவுடன் வெளியான புதிய சர்வே! குட்டையை குழப்பிவிட்ட பிகே.. ரேஸில் முந்தியது யார்?
பாட்னா: அடுத்த மாதம் நடக்கவுள்ள பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என IANS-Matrize News நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில், ஆளும் பாஜக கூட்டணி 49% வாக்குகளுடன் 150-160 இடங்களை வெல்லும் என்று அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

புதிய சர்வே
இதற்கிடையே பீகார் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. IANS-Matrize News ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த சர்வேயை எடுத்துள்ளன. இதில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக உள்ள என்டிஏ கூட்டணி வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, நிர்வாகம் குறித்த அதிருப்தி இருந்தாலும் அதைத் தாண்டி என்டிஏ கூட்டணி வெல்லும் என அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
வெல்வது யார்?
அதில் சுமார் 49% பேர் என்டிஏ வாக்களிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 தேர்தலில் என்டிஏ கூட்டணி 37.3% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில், அதை விட சுமார் 12% வாக்குகளை என்டிஏ கூட்டணி கூடுதலாகப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் அதிகபட்சமாக பாஜக 21% வாக்குகளுடன் 80-85 இடங்களைப் பெறும் என்றும், நிதிஷ்குமார் கட்சி 18% வாக்குகளுடன் 60-65 இடங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது..
கூட்டணியில் உள்ள இதர கட்சிகளான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மொத்தமாக 10-15 இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்தியா கூட்டணி
மறுபுறம் இந்தியா கூட்டணி பின்னடைவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 37.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்தாண்டு 36% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த கூட்டணி பெற்ற இடங்கள் கடுமையாகச் சரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல் இந்த கூட்டணி 110 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை 70-85 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியில் அதிகபட்சமாகத் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி 21% வாக்குகளைப் பெற்று, 60-65 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அடுத்து காங்கிரஸ் 8% வாக்குகளுடன் 7-10 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 6-9 இடங்களைப் பெறும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் கட்சி
பீகார் அரசியலில் புதிதாக நுழைந்துள்ள பிரசாந்த் கிஷோர் கட்சி தான் இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. அவரது ஜன சுராஜ் கட்சி 7% வாக்குகளுடன் 2-5 இடங்களில் வெல்லும் எனத் தெரிவித்துள்ளது. பல தொகுதிகளில் ஜன் சராஜ் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கலாம். பாரம்பரியமாகச் சாதி அடிப்படையில் வாக்களிப்பவர்களில் கணிசமானோர் பிரசாந்த் கிஷோர் பக்கம் போகலாம். அதேபோல மஜ்லீஸ் கட்சி 1-3 இடங்களை வெல்லும் என IANS-Matrize News நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications