ஹை டென்ஷனில் பீகார் அரசியல் களம்.. பாஜகவிடம் நிதிஷ் குமார் வைக்கும் டிமாண்ட்! நடப்பது என்ன?
பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையும் விவகாரத்தில் நிதிஷ் குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் நேரடியாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் விவகாரத்திலும் தனது விருப்பத்தை பாஜக தலைமையிடம் நிதிஷ் குமார் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
பீகாரில் கடந்த 2020 சட்டமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து நிதிஷ் குமார் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் பாஜக 78 தொகுதிகளிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 தொகுதிகளையும் வென்றது. அங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். பாஜகவை விட குறைந்த இடங்களில் வென்றாலும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி கிடைத்தது.

எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதன்படி முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் உள்ளனர். இந்தக் கூட்டணி ஆட்சி கடந்த 2 ஆண்டுகளாக பீகாரில் நடைபெற்று வரும் நிலையில், திடீர் திருப்பமாக தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கை கோர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கடந்த சில நாட்க்ளாகவே பீகார் அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. நிதிஷ் குமார் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து ராஷ்டிரிய ஜனதா தளம் அமைச்சர்களையும் நீக்கிவிட்டு பாஜக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது துணை முதல்வராக இருக்கும் தேஜஸ்வி யாதவின் பதவியை பறிக்க நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதால், புதிய துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த சுஷில் மோடியை நியமிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் நேரடியாக தொலைபேசி மூலம் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. துணை முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்க நிதிஷ் குமாருக்கு பாஜக தலைமை வழங்கி விட்டதாகவும் நிதிஷ் குமார், சுஷில் குமார் மோடியை துணை முதல்வராக நியமிக்க விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், சுஷில் குமார் மோடி இதை ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை.
சுஷில் குமார் மோடி துணை முதல்வராக இருந்த போது நிதிஷ் குமாரின் தீவிர ஆதரவாளர் என்று எதிர்க்கட்சிகளால் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைவர்கள் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சிக்கும் போது கூட சுஷில்குமார் தலையிட்டு அதிகம் விமர்சிக்க விடாமல் பார்த்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு இடையே லோக்சபா தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடும் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் அனைத்து பாஜக எம்.எல்.ஏக்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்துவிட்டார்களாம். நிதிஷ் குமார் நாளை மதியம் தனது இல்லத்தில் விருந்து வைப்பதாகவும் அதில் பாஜக எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பிறகு இரு கட்சிகளும் சேர்ந்து ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications