குடியரசு தினம் எப்போது? உளறி தள்ளி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
குடியரசு தினம் குறித்து தவறான தேதியை குறிப்பிட்ட பீகார் அமைச்சரின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாட்னா: பீகாரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது உரையில் குடியரசு தினத்தை தவறாக குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
68-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் கிஷன்கன்ஜில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ராணுவ மரியாதைக்குப் பின்னர் அவர் குடியரசு தின உரையாற்றினார்.
தனது உரையில் இந்திய குடியரசு தினம் உருவாக போராடியவர்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்திய குடியரசு தினம் உதித்தது 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி என்பதற்கு பதிலாக ஜனவரி 28- ம் தேதி என குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.