ரூ.5 லட்சம் கொடுத்தால் இரவில் தேர்வு எழுதலாம்.. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் தகவல்
பாட்னா: 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து இரவில் சென்று தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்றதாக பீகாரில் மோசடி செய்து முதல் இடம் பெற்ற மாணவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அரசியல் பாடப்பிரிவில் 500-க்கு 444 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியாக அறிவிக்கப்பட்டவர் ரூபி ராய் (19). ஆனால், உள்ளூர் தொலைக்காட்சி அளித்த பேட்டியில், 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' என்பதை 'புரோடிகல் சயின்ஸ்' என உச்சரித்ததும், அரசியல் அறிவியல் என்றால் சமையலை பற்றியது என கூறி தொலைக்காட்சி சேனல்காரர்களை அதிர வைத்ததார் ரூபி ராய். இதனால் அவரது தேர்ச்சி குறித்த சந்தேகம் எழுந்தது.

இவரைப் போல, கலை மற்றும் அறிவியல் பிரிவில், 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதியின்றி, முதலிடம் பிடித்ததாக எழுந்த புகாரை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் மறு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறாத ரூபி ராய் உள்ளிட்ட மாணவர்களின் பிளஸ் 2 தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினர், ஜூன் மாதம் 25-ம் தேதி ரூபி ராயை கைது செய்து, பியோர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த ராகுல் குமார் என்ற மாணவர் சிறப்பு புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 5 லட்சம் ரூபாயை இரண்டு தவணைகளில் லஞ்சமாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
லஞ்சம் அளித்த மாணவர்கள், தேர்வு நாளன்று தேர்வு அறைக்கு சென்று, விடைத்தாளில் தங்கள் பெயரை மட்டும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிடாலம். பிறகு இரவில் மீண்டும் தேர்வு அறைக்கு சென்று, அங்கு தயாராக இருக்கும் விடைகளை பார்த்து கேள்விகளுக்கு விடை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் பீகார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவரின் மனைவி உஷா சின்ஹா, பிஷுன் ராய் கல்லூரி முதல்வர் பச்சா ராய் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications