பீகாரில் 2 விலை மாதுக்களுடன் ஹோட்டலில் சிக்கிய துணை மேயர்
பாட்னா: பீகாரில் ஹோட்டல் ஒன்றில் நடந்த சோதனையில் கயாவின் துணை மேயர் இரண்டு விலை மாதுக்களுடன் சிக்கினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த ஹோட்டலில் திடீர் என்று சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு அறையில் இரண்டு விலை மாதுக்களுடன் இருந்த பீகாரின் இரண்டாவது பெரிய நகரான கயாவின் துணை மேயர் மோகன் ஸ்ரீவஸ்தவா சிக்கினார். ஸ்ரீவஸ்தவா உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு கோட்வாலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பீகாரின் வரலாற்றில் ஒரு துணை மேயர் விபச்சார வழக்கில் சிக்கியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக கடந்த மாதம் ஆண்கள் முடி திருத்தும் நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அந்த நிலையம் ஸ்ரீவஸ்தவாவுக்கு சொந்தமானது. ஆனால் அவரோ அந்த நிலையம் தனது மனைவிக்கு சொந்தமானது என்றும், அங்கு என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.