காஷ்மீரத்து அக்கா தங்கச்சியை மணந்த அண்ணன் தம்பிகள்.. தந்தை புகார்.. கைது செய்த போலீஸ்!
காஷ்மீர் சகோதரிகளை மணந்த பீகார் சகோதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
பாட்னா: காதலுக்கு காஷ்மீர் தெரியுமா.. பீகார் தெரியுமா.. சத்தியமா தெரியாதுதான்.. அதனால்தானோ என்னவோ காஷ்மீரத்து அக்கா-தங்கச்சியை கல்யாணம் பண்ணிய பீகார் அண்ணன் - தம்பிகளை போலீசார் மாமியார்" வீட்டுக்கு கூட்டிச்சென்றனர் .
காஷ்மீர் விவகாரம் நாடு முழுக்க பரபரப்பாகி வந்தாலும், பல வருடங்களாக காஷ்மீர் என்றாலே ஒருவித பதட்டம் நம்மை வந்து தொத்தி கொள்ளும். இப்போது ஒரு கல்யாண சேதி வந்து.. அதுவும் பரபரப்பாகி விட்டது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ளது ராம்விஷ்ணுபூர் என்ற கிராம். இங்கு வசித்து வந்தவர்கள் பர்வேஸ் ஆலம், தர்வேஜ் ஆலம்.
இவர்கள் இருவருமே சகோதரர்கள். ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் கார்ப்பென்டர்களாக கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேலை பார்த்து வந்தனர். வேலைக்கு போன இடத்தில் லவ் வந்துவிட்டது. அண்ணன்-தம்பிகளுக்கு, அங்கு வசித்து வந்த அக்கா - தங்கையின் மீது காதல்!
அதனால் அந்த சகோதரிகளை அழைத்து கொண்டு, தங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டனர். சில நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இப்போது விஷயம் என்னவென்றால், காஷ்மீர் சகோதரிகளை கல்யாணம் செய்துகொண்ட பீகார் சகோதரர்களை காஷ்மீர் போலீஸ் கைது செய்துள்ளது. இதற்கு, தங்கள் மகள்களை இளைஞர்கள் கடத்திவிட்டதாக தந்தை புகார் அளித்ததே காரணம். அதனால்தான்தான் பீகார் போலீசாரின் உதவியுடன் காஷ்மீர் போலீசார் இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
ஆனால் சகோதரர்களோ.. அவர்கள் சம்மதத்துடன்தான் கல்யாணம் செய்து கொண்டோம். கட்டாயப்படுத்தவில்லை.. கடத்தவும் இல்லை என்று விளக்கம் அளித்து வருகின்றனர்.