வீட்டை விட்டு விரட்டப்படும் இந்துக்கள்? வக்பு சட்டத்துக்கு எதிரான மே.வங்க வன்முறையில் பாஜக புகார்
கொல்கத்தா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையான நிலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மேற்கு வங்க வன்முறையில் 400க்கும் அதிகமான இந்து குடும்பத்தினர் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளதாக பாஜக பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் அல்ல பெயரில் தானமாக வழங்கும் சொத்துகள் வக்ஃபு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த வக்ஃபு வாரிய நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்ற இருசபைகளிலும் நிறைவேற்றியது.

ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் வக்பு சட்ட திருத்தம் சட்டமாகி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. சுடி, துலியன், சம்சீர்கஞ்ச்,ஜான்கிபூர் உள்ளிட்டபகுதிகளில் வன்முறை பரவியது. தந்தை - மகன் உள்பட 3 பேர் இறந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். தற்போது வரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
முர்ஷிதாபாத் வன்முறைகள் வெடித்ததால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தங்களது மாநிலத்தில் ஒரு போதும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தம் அமல்படுத்தப்படாது என அறிவித்தார். அந்த சட்டத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. இது மத்திய அரசின் செயல். இதனால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரம் போலீசர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி அங்கு மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி எல்லை பாதுகாப்பு படையினரும் போலீசாருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே தான் பாஜக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி கூறுகையில், ‛‛400க்கும் அதிகமான இந்துக்கள் வீட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் மத துன்புறுத்தல் என்பது உள்ளது. இது உண்மையானது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு தரப்பை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ளது. இது பயங்கரவாதிகளுக்கு தைரியத்தை வழங்கி உள்ளது. இங்கு இந்துக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சொந்த நாட்டில் சொந்த மண்ணில் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள்'' என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு கண்காணிப்பு பணி என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, பாஜக - மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் வார்த்தை மோதல் என்பது ஏற்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications