அள்ள அள்ள ஐநூறு ரூபாய் நோட்டு.. தொக்காய் சிக்கிய பாஜக வேட்பாளர்! சத்தீஸ்கரில் சலசலப்பு
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை இரண்டாவது கட்டமாக 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிகாலை ரூ.11.50 லட்சம் ரொக்க பணத்துடன் பாஜக வேட்பாளர் ஒருவர் சிக்கியுள்ளார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 17ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் 40.78 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சியில் இருந்து வரும் நிலையில், இந்த முறை ஆட்சியை யார் கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தீவிரமடைந்துள்ளது.

தேர்தல் நெருங்கிய நிலையில் நேற்றுடன் பிரசாரங்கள் ஓய்ந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் கோர்பா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ரூ.11.50 லட்சம் பணத்துடன் பாஜக வேட்பாளர் ஒருவர் சிக்கியுள்ளார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கியது கார்பா மாவட்டத்தில் உள்ள பாலி-தனகர் தொகுதியின் பாஜக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏவான ராம் தயாள் உய்கே என்பவர்தான்.
பாசன் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 1 மணியளவில் போன் கால் வந்திருக்கிறது. அதில் மறுமுனையில் பேசிய ஜுன்கிடி கிராம மக்கள், தங்கள் பகுதியில் உய்கே பண விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படையினர் உய்கேவின் காரை சோதனையிட்டுள்ளனர். அதில் ரூ.11.50 லட்சம் பணம் இருந்திருக்கிறது. எனவே பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரையும் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றிருக்கின்றனர்.
அதேபோல இந்த சம்பவத்தின் போது உய்கே காரில் இருந்திருக்கிறார். எனவே அவருக்கு சிக்கல் எழுந்திருக்கிறது. ராம் தயாள் உய்கே, 1998ம் ஆண்டு முதன் முதலாக பாஜக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் பாஜக சார்பில் பாலி-தனகர் தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தனது சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் கொடுக்காமல் பெண் வேட்பாளர் ஒருவரை பாஜக களத்தில் இறக்கியுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 9ம் தேதி அமல்படுத்தப்பட்டன. அப்போது முதல் நேற்றைய தேதி வரை சுமார் ரூ.73.90 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம், சட்டவிரோத மதுபானம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பறக்கும் படையினர் கூறியுள்ளனர். இதில் ரூ.20.15 கோடி ரொக்க பணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications