டெல்லியில் கிரண்பேடி அலுவலகம் சூறை.. ஆம்ஆத்மிதான் காரணம் என்கிறது பாஜக
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் பதவி வேட்பாளராக களமிறங்கியுள்ள கிரண் பேடியின் கிருஷ்ணாநகர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் நேற்று மாலை புகுந்து சூறையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண்பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை முன்னிறுத்தி பாஜக தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணா நகர் தொகுதியில் உள்ள கிரண் பேடியின் தேர்தல் அலுவலகத்தின் உள்ளே, திங்கள்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். அலுவலகத்தில் இருந்த மேஜை, கண்ணாடிகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் இருந்த பாஜக தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
தகவலறிந்ததும் கிரண் பேடி தனது பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு தாக்குதல் நடத்தப்பட்ட தனது அலுவலகத்துக்கு விரைந்தார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜகவினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இத்தாக்குதல் குறித்து போலீஸார் கூறுகையில், "இத்தாக்குதலில் வழக்கறிஞர்கள் குழுவினர் ஈடுபட்டதாக நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், எதற்காக தாக்கினர் என்பது தெரியவில்லை' என்றனர்.
இத்தாக்குதலுக்கு டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இத்தாக்குதலில் ஆம் ஆத்மி கட்சி ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்படும் முன்பு வரை டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. ஆனால், தற்போது மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு டெல்லி மக்கள், ஆம் ஆத்மி கட்சியை நிராகரிக்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications