மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்.. பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. மம்தா பானர்ஜி
கொல்கத்தா: பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியை உடைக்க முடியாது என்றும் பேசினார்.
நாட்டில் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 244 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 295 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்த நிலையில் தேர்தல் முடிவு அவர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் மக்கள் பொய்யாக்கி உள்ளனர். 3 வது முறையாக மீண்டும் மோடி ஆட்சி அமைப்பார் என்று பாஜக தலைவர்கள் உறுதியோடு கூறி வந்த நிலையில் அவர்களுக்கும் இது பெரிய அடியாக மாறியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மோடியின் ஆணவத்திற்கு கிடைத்த முடிவு என்று கூறினார்.
இதேபோல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் லோக்சபா தேர்தல் வெற்றி மோடிக்கு எதிரான மக்கள் தீர்ப்பு. பாஜகவின் ஆணவத்திற்கு கிடைத்த தோல்வி இது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வெற்றி சாத்தியமானது என்று பேசினார். இந்த நிலையில், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கூறுகையில், "லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார் மோடி. பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும். இந்தியா கூட்டணியை உடைக்க முடியாது" இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.












Click it and Unblock the Notifications