மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் வெற்றி: புதிய முதல்வர்களை இன்று தேர்ந்தெடுக்கிறது பாஜக!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அம்மாநிலங்களில் புதிய முதல்வர்களை இன்று தேர்ந்தெடுத்து அறிவிக்க உள்ளது பாஜக.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
அதன்படி, மகாராஷ்டிராவில் மொத்த இடங்களான 288ல் 122 இடங்களிலும், ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் 47 இடங்கள்லும் அமோக வெற்றி பெற்றுள்ளது பாஜக. அதனைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
பின்னர், கட்சி மேலிட பார்வையாளராக மகாராஷ்டிராவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஹரியானாவில் வெங்கையா நாயுடுவும் நியமிக்கப் பட்டனர். இன்று இவர்கள் தலைமையிலான குழு கூடி அவ்விரு மாநில முதல்வர்களைத் தேர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் யாரை முதல்வராக்குவது என பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை என நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.